1 யோவான் 4 : 4-6                                     28 செப்டெம்பர், 2021 செவ்வாய்

“வாலிபரே, தீயோனை நீங்கள் ஜெயித்திருக்கிறீர்கள்.” – 1 யோவான் 2 : 13

வாழ்க்கையில் சிறப்பான பருவம் வாலிபம். வாழ்க்கையின் வசந்தம் வாலிபத்தில் தான் இருக்கிறது. இளமைத் துடிப்போடும், நல்ல ஆரோக்கியத்தோடும் உடல் பலத்தோடும் வாழ முடிகிறது. வாலிபம் இறைவன் அருளும் மாபெரும் ஈவு. எல்லாவற்றையும் வெற்றிகொள்ள, காட்டாற்று வெள்ளம் போலக் கரைபுரண்டு ஓடும் பருவம் வாலிபம். தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளும், வாலிபர்களையே தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். சாத்தானும் வாலிபர்கள் மேல் ஒரு கண் வைத்திருக்கிறான். அவர்களின் வாழ்க்கையைச் சுண்டியிழுத்து, நேர் வழியை விலக்கி, அழிவுக்கு இழுத்துச் செல்லுகிறான்.

இறைவன் வாலிபர்களைத் தமக்கென்று தெரிந்தெடுக்கிறார். திருமுழுக்கின் வழியாக நாம் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். பிள்ளைகள், பிதாக்கள், வாலிபர் என்று வயதிற்கேற்ப நம்மை வகைப்படுத்துகிற ஆசிரியர் யோவான். வாலிபர்களின் மதிப்பையும் திறமைகளையும் யோவான் காணத் தவறவில்லை. திருச்சபைகளில் வாலிபர்கள் நம்மோடு இருக்கிறார்கள். வாலிபரும் பாவ மன்னிப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஆதி முதல் இருக்கிற இறைவனை அறிந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதுகிறார். வாலிபரின் திறனை வியந்து எழுதுகின்றார், ஜெயம் பெற்றவர்கள் என்று எழுதினார் யோவான்.

வாலிபர் வலிமை தீயோனை வெல்வதில் சிறப்புப் பெறுகின்றது என்பதை இவ்வசனத்தில் குறிப்பிடுகிறார். வாலிபரே நீங்கள் பலவான்கள் – இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாத்தானை வென்றவர்கள் – இறைவன் உங்களோடிருக்கிறார். வாலிபத்தை, வரங்களை இறை பணிக்கு அர்ப்பணியுங்கள். வாலிபம் ஆசீர்வாதமாக இருக்கும். வயோதிபம் வரட்டும், ஆண்டவருக்குப் பணி செய்யலாம் என்று காத்திராதீர். ஜெயம் பெற்றவர்களே, ஜெய வீரர்களாக இயேசுவுக்காக விளம்பரதாரர் ஆகுங்கள்.

சத்துவம் இல்லாத எங்களுக்கு சத்துவத்தை அருளுகிற இறைவா! எங்கள் வாலிபத்தை உம் பணிக்கே அர்ப்பணிக்கிறேன். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.