யோவான் 14 : 12-26                                            31 ஜூலை, 2019 புதன்

“….என்றென்றைக்கும் உங்களோடிருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு சகாயரை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” – யோவான் 14 : 16

மனிதன் தனித்து வாழ முடியாதவன். ஒருவரை ஒருவர் சார்ந்த வாழ்வே மனித வாழ்வு. மனித வாழ்வில் கிடைத்திருக்கிற மற்றொரு துணைவரை வசனம் நினைவுபடுத்துகிறது.

இயேசுவின் இறுதிகாலத்தில், சீடர்களிடம் கூறிய ஆறுதல் வார்த்தைகள் இன்றைய தியானப்பகுதி, `உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு சகாயரை உங்களுக்குத் தந்தருளுவார்’ என்றார் இயேசு! என்றைக்கோ ஒரு நாள் எனக்கு ஆவியானவர் தந்தருளப்படுபவர் அல்ல. என்றைக்கும் என்னோடிருக்க அருளப்படுபவர் ஆவியானவர். இறைவன் இயேசு சீடர்களை தனியே விட்டுச் செல்லவில்லை. இயேசுவை நம்புகிறவர்களும் தனிமையில் தவிக்க விடப்பட்டவர்களல்ல. பழைய ஏற்பாட்டுக் காலத்திலும், ஆவியானவர் இறைமக்களோடு தங்கியிருந்தார். ஆவியானவர் நிரந்தரமாக இறை மக்களுடன் இருக்கிறார் என்பதைப் பலர் உணராதிருந்தனர்.

சிம்சோனிடம் ஆவியனாவர் இறங்கினார். அவன் சிங்கத்தைக் கொன்றான். கடவுளின் ஆவி இறங்கியது. பெலிஸ்தியரை முறியடித்தான். கடவுளின் ஆவி இறங்கியது. கட்டுகளை அவிழ்த்தான் என்று பல இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆவியானவர் வந்து போகிறவர் போலக் காட்டப்பட்டுள்ளார். ஆனால் என்றைக்கும் நம்மோடிருக்கிற ஆவியானவரை உணராதவர் நாம்தான் என்பதை நாம் உணருதல் நன்று.

பெந்தேகோஸ்தே நாள் வந்தபோது எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். விசுவாசத்தோடு ஜெபித்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் ஆவியானவர் நிரம்பினார். பயந்து பதுங்கி இருந்த சீடர்கள் ஆவியானவரால் பலப்படுத்தப்பட்டனர். சாட்சிகள் ஆனார்கள். புது வாழ்வின் அனுபவத்தைப் பெற்றார்கள். ஆவியானவரின் இறங்குதல்-ஊற்றப்படுதல்-நிரப்பப்படுதல் நடைபெறுகிறது. வெளிப்படையாக, உலகம் அறிய, பலரும் அறிய சிறப்பு நோக்கத்திற்காக இப்படி நடைபெறுகிறது. இதனால், இதற்கு முன்போ, இதற்குப் பின்போ ஆவியானவர் நிலைத்திருப்பதில்லை என்றாகி விடாது. ஆவியானவர் நம்மோடு வசிக்கிறார். நமக்குள்ளும் இருக்கிறார். ஆவியானவர் நம்மோடிருப்பதால் நாம் கலங்கவும், வியப்படையவும் வேண்டாம். ஆவியானவரால்தான் நாம் விசுவாசிக்கிறோம். ஆவியானவர் நம்மோடு சேர்ந்து ஜெபிக்கிறார். புதிய ஜீவன் உள்ளவர்களாக, நற்கனி கொடுத்திட ஆவியானவரின் பிரசன்னத்தைத் தினமும் உணருவோம்.

எங்களோடு வாசமாயிருக்கும் ஆவியானவரே! விசுவாசத்தால் எங்களைப் பலப்படச்செய்யும். கிருபை அருளுகின்ற, பாவ மன்னிப்பின் காரணராகிய இயேசுவின் வழியே ஆமேன்.