சங்கீதம் 24 : 1-5 18 ஏப்ரல் 2021, ஞாயிறு
“அதன் நுனி வானத்தை எட்டியிருந்தது, …தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய்…” – ஆதியாகமம் 28 : 12
உறக்கத்தில், கனவில் அதிசயமான காட்சிகளைச் சிலர் காண்பர். இவை அர்த்தமுள்ளதாகவும் சமகாலப் பொருத்தம் உள்ளதாகவும் இருக்கக் கூடும். இது போன்ற காட்சிகள் வழியே கடவுள் தங்களோடு பேசினதாக நினைப்பர். இவற்றைத் ‘தரிசனம்’ என்றும் கூறுவர். யாக்கோபு என்பவர் தனது உடன்பிறப்பாம் ஏசாவை ஏமாற்றினார். ஆகவே உடன்பிறந்தவருக்கு அஞ்சினார் யாக்கோபு. தந்தையின் அனுமதியுடன் வேறு ஊருக்கு ஓட்டம் பிடித்தார் யாக்கோபு. அங்கே யாக்கோபு இரவில் படுத்திருந்த இடத்தில் கண்ட கனவுக் காட்சிதான் இன்றைய தியானப் பகுதி. யாக்கோபு தவறு செய்தார். இருந்தாலும் தேவதூதர் பரலோகத்திற்கு ஏறுகிறதையும் இறங்குகிறதையும் கண்டார். இறைவனின் அன்பும் கருணையும், தனது ஏமாற்று வேலையை மன்னித்துவிட்டது என்று நம்பினார் யாக்கோபு. மோட்சம் பரலோகம் என்ற சொற்களால் கடவுளின் இராஜ்யம் நம்மை விட்டு வெகு தொலைவில் இருப்பதாக நம்புகின்றோம். யாக்கோபுவின் சாட்சி, கடவுளின் ஆட்சி நமக்கு அருகில் இருப்பதைக் காட்டுகிறது. பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் தொடர்பு இருக்கின்றது என்பதை இக்காட்சி உறுதிசெய்கிறது. இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு பரலோக ஏற்றம் அத்தனையும் மனிதராகிய நாம் விண்ணகத்திற்கு வெகு அருகில் இருக்கின்றோம் என்று நினைவுபடுத்துகின்றது.
இயேசுவால் பரலோகம் நம்மை நோக்கி இறங்கியது. இயேசுவின் உயிர்ப்பும் விண்ணக ஏற்றமும் நம்மை விண்ணகத் தொடர்புள்ளவர் களாக்கியிருக்கின்றது. இறையவர் கருணையால் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. நமது மனமும் வாழ்வும் திருத்தம் பெறுகின்றன. விண்ணகப் பிரஜைகளாகத்தான் நாம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தியான வரியில் இந்த உண்மை ஊர்ஜிதம் ஆகின்றது.
விண்ணக உரிமையாளரே! மண்ணில் பிறந்து பாவத்தில் உழலுகின்ற எம்மை மன்னிக்கின்றீர். விண்ணகக் குடியுரிமை எமக்கு உம்மால் வழங்கப்படுகின்றது. நன்றி. விண் ஏறிய இயேசு வழியே ஆமேன்.