2 கொரிந்தியர் 5 : 11-21 28 நவம்பர் 2025, வெள்ளி
“ஒப்புரவாகுதலைப் பற்றிய வார்த்தையை எங்களிடம் ஒப்புவித்தார்.” – 2 கொரிந்தியர் 5 : 19
இரண்டு சகோதரர்களுக்கு தந்தையின் சொத்துக்களைப் பிரிப்பதில் மனத்தாங்கல் ஏற்பட்டு பிரிவினையில் முடிந்தது. வெகு காலமாக இரு குடும்பத்தாருக்கும் பேச்சுக்கள் இல்லை. தந்தையின் நண்பர் இளைய சகோதரரை ஓரு நாள் சந்தித்தார். முத்த மகன் படிக்காமல் தந்தையுடன் கூலிவேலை செய்து படிக்க வைத்த காலத்தினை நினைவுபடுத்தினார். உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த உயர்வுக்கு மூத்த சகோதரரும் காரணம் என்பதனை புரிய வைத்தார். இளைய சகோதரர் மூத்தவருடன் உள்ள கசப்பை மறந்து ஒப்புரவானார். தன் தந்தையின் நண்பரை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினார்.
வேதாகமத்தில் தந்தையின் சொல் கேளாமல் சொத்துக்களை வாங்கி அதனை இல்லாமல் ஆக்கிவிட்டு வெறும் கையுடன் வந்தான் இளைய மகன். தந்தை சேர்த்ததை மூத்த மகன் கோபங்கொண்டு வீட்டினுள் வராதபடி காணப்பட்டான். ஆனால் அன்பு மிகுந்த தந்தை அவனிடம் காரியங்களை எடுத்துக்கூறி ஒப்புரவாக செய்தார் என்பதை பார்க்கிறோம்.
பிதாவுக்கும், மனிதராகிய நமக்கும் ஏதேன் தோட்டத்தில் பாவக்கறைகளினால் ஏற்பட்ட பிரிவினையை இயேசுவானவர் சிலுவையில் தன் உயிரை கொடுத்து பிதாவையும், நம்மையும் ஒப்புரவாக்கியுள்ளார் என்ற சத்தியத்தை அறிவோம்.
திருச்சபையில் இருபிரிவுகள் காணப்படுகிறது என்பது உண்மை. இந்த இருபிரிவுகளையும் ஒன்று சேர்த்து திருச்சபையின் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரிவினையை அதிகப்படுத்தி ஒப்புரவாகாமல் இருக்க செய்வதை கண்டிக்க வேண்டும்.
இன்று நமது சபைகளில் காணப்படும் பிரிவினைகளை சரிசெய்ய நாம் என்ன செய்கிறோம். ஒப்புரவாக்குதலில் ஈடுபடும் போது நமக்கு கஷ்டங்கள் வரலாம். ஆனால் இருதரப்பினரையும் ஒப்புரவாக்குவது நமது கடமை என உணர வேண்டும்.
குடும்பங்களில் கணவன், மனைவி ஒப்புரவாகாமல் இருந்தால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகும். ஒப்புரவாகுதலில் ஒருவர் தாழ்மைபட வேண்டும். தாழ்மைபடுவது கோழைத்தனம் இல்லை என்பதனை வாழ்க்கையில் உணர்வோம்.
பிதாவோடு, நாம் ஒப்புரவாக்கப்பட்டது போல சக மனிதர்களிடம் ஒப்புரவாகி கிறிஸ்து மகிமை பட வாழ்வோம்.
அன்புள்ள கடவுளே! எங்கள் மனதில் காணப்படும் கசப்புகளை மாற்றி, அனைத்து மக்களோடும் சமாதானமாய் வாழ்வதற்கு அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.
