ஏசாயா 58 : 9-11                                       10 அக்டோபர் 2025, வெள்ளி

“மெய்யாகவே, நமது நோய்களை அவரே ஏற்றுக்கொண்டு, நமது வேதனைகளைச் சுமந்தார்.” – ஏசாயா 53 : 4

தற்போதைய உலகம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலம். கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலம். கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய இக்காலத்தில் சின்ன சின்ன பெலவீனங்கள் என்றாலும் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கிறோம். ஒரு சிறு தும்மல் இருமல் என்றாலும் அச்சப்படுகிறோம். ஒரு பேருந்திலோ, கூட்டத்திலோ ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ மிகுந்த அச்சம் தோன்றுகிறது. நோய்களைப்பற்றிய பெரும் பயம் நம்மை அறியாமலே நமக்குள் ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் நோயுற்றோருக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. இன்றைய தியானப் பகுதி கிறிஸ்து நோயுற்றோர் மீதும் வேதனையில் வாழ்வோர் மீதும் காண்பித்த அன்பை பற்றி மிக அழகாக விவரிக்கிறது.

இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் தொழுநோயாளிகள் புறக்கணிக்கப் பட்டவர்கள். அவர்களை பார்ப்பதையும் தொடுவதையும் மக்கள் தவிர்த்தனர். தொழுநோய்க்கு அக்காலத்தில் மருந்தில்லாததால் மக்கள் இவ்வாறு நடந்துகொண்டனர். தொழுநோயாளிகள் சரீர பெலவீனத்தின் துன்பத்தை அனுபவித்தார்கள். அதனோடே புறக்கணிப்பின் மன வேதனையையும் அனுபவித்தார்கள். இயேசு தனிமையில் இருந்தபோது ஒரு தொழுநோயாளி அவரைத் தேடி வந்தார். “உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலாகும்” என்றார். இயேசுவோ அவர் அருகில் சென்று அவரைத் தொட்டு சுகமாக்கினார்.

இச்செயல் வழியாக இயேசு நோயுற்றோர் மீது கொண்ட அக்கறையை வெளிப்படுத்துகிறார். தொழுநோயாளியை தொட்டதின் மூலம் நோயுற்றோரை புறக்கணிக்கிறவரல்ல என்பதை ஆழமாய் புரிய வைக்கிறார். அவர்மீது மட்டுமல்ல இந்த முழு உலகத்தின்மீதும் அன்பு கொண்டவர் இயேசு. சிலுவையில் தம்மை தாமே பலியாக தந்ததன் மூலம் அனைத்து மக்களின் பாவங்களை சுமந்து தீர்த்தார். அனைவருக்கும் பாவ மன்னிப்பை பெற்றுத் தந்தார்.

கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசம் நமக்கு இந்த ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறது. அவரது அன்பை பெற்ற நாம் அந்த அன்பை பகிர்வதே கடமை. நம் வீட்டில் அல்லது நம் உறவினர்களில் பெலவீனமானவர்கள் இருக்கலாம். அவர்களை வெறுக்காமல், புறக்கணிக்காமல் உதவியாய் இருக்க வேண்டியது முக்கியம். அவர்களை நாம் நேசிக்க வேண்டும். அவர்களோடு பேசுவதும் பாதுகாப்புடன் தொடுவதும் அவர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொண்டுவரும். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். இந்த செயற்பாடுகள் கிறிஸ்துவின் அன்பை அவர்கள் பெற உதவி செய்யும். கிறிஸ்துவின் அன்பு அவர்களை குணமாக்கும்.

அன்பின் பிதாவே, நோயுற்றோரை, வேதனையில் இருப்போரை நேசிக்கவும் ஜெபிக்கவும் எங்களுக்கு கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.