சங்கீதம் 18 : 5-7 14 ஆகஸ்ட், 2021 சனி
“இதோ எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருவதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.” – யாத்திராகமம் 14 : 10
இஸ்ரவேல் மக்கள் அடிமைகளாக வாழ்ந்த எகிப்து நாட்டிலிருந்து கடவுள் காட்டுகிற தேசத்திற்குப் புறப்பட்டனர். ஆனால் புறப்பட்ட பின்பு இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலை இஸ்ரவேலருக்கு வந்தது. முன்னால் போகலாம். ஆனால் செங்கடல் குறுக்கிடுகின்றது. பின்னால் போகலாம் என்றால் எகிப்தியப் படை இவர்களை விரட்டிக் கொண்டு வருகின்றது. என்ன செய்வது? விண்ணகத் தந்தையிடம் இந்த நெருக்கடி நிலையிலிருந்து விடுதலைக்காக வேண்டினர். இன்றைய சிந்தனைக்குரிய கருத்து இது தான்.
வாழ்க்கையில் பல்வேறுபட்ட நெருக்கங்கள்! போராட்டங்கள்! எண் திசைகளிலிருந்தும் இடையூறுகள்! நம் சக்தி, புத்தி ஆகியவற்றால் எதுவும் செய்ய முடியவில்லை. கூண்டுக்குள் அடைபட்ட கிளி போன்ற நிலையிலிருக்கிறீர்களா? நாலாபக்கமும் வேலியடைக்கப்பட்ட நிலையில் வெளியேற முடியாமல் வேதனையுறுகின்றீர்களா? என்ன செய்வது என்று கலங்கித் தவிக்கின்றீர்களா? இறை வார்த்தையைக் கவனியுங்கள்! எல்லா வழிகளும் அடைபட்டு விட்டன. இருப்பினும் இறைவழி திறந்து தானே இருக்கின்றது? கடவுளுக்கு நேராகக் கரங் கூப்புங்கள்!
பத்மு தீவில் சிறைபட்டுக் கிடந்தார் யோவான். கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைத்ததற்காகத் தான் இப்பரிசு! பாறையில் கல்லுடைக்கின்றது அவருடைய மெல்லுடல். வயிற்றுக்குச் சிறிது உணவு மட்டுமே கிடைத்திருக்கும். உதவுவார் யாருமில்லை. உறவெனச் சொல்லிக்கொள்ள ஆளில்லை. ஆனால் கடவுள் கைவிடவில்லை. கடவுள் தமது தரிசனத்தைக் கொடுத்தார். உலகின் முடிவு பற்றிய காட்சிகளைக் கண்டார். இவை திருமறையின் இறுதிப் புத்தகத்தில் தரிசன ஆகமத்தில் இடம் பெற்றுள்ளன. உலகுக்குச் செய்தி எழுதுகின்ற பாக்கியம் பெற்றார் யோவான். உலகக் கதவுகள் உங்களுக்கு அடைக்கப்படலாம்; ஆனால் இறைவழி திறந்துதானிருக்கிறது. கவலைப்படாதீர்கள். இன்றைய திருமறைப் பகுதியை இன்னொரு தடவை படியுங்கள். இதை உங்கள் இதயங்களில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். தைரியம் அடைவீர்கள், புதிய வழிகள் திறக்கும்.
பரம தந்தையே! நெருக்கடியான நிலையிலும் உம்மையே நோக்கி ஜெபித்திடும் நல் மனதை எனக்குத் தந்திடும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.