எசேக்கியேல் 45 : 9-12 22 ஆகஸ்ட் 2025, வெள்ளி
“இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும், நீங்கள் கொடுமையையும் அழிவையும் அகற்றி நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்.” – எசேக்கியேல் 45 : 9
இன்றைய தியான வாக்கியப் பகுதியில் இஸ்ரவேல் சமூகத்தில் இருந்த அநீதி மற்றும் அடக்குமுறைகளை தலைவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் தவிர்க்க கடவுள் அறிவுறுத்துகிறார். கடவுள் தங்களுக்கு வகுத்த நீதியான பாதையிலிருந்து விலகியிருந்த இஸ்ரவேலின் தலைவர்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசி வழியாக கடவுள் எச்சரிக்கை செய்கிறார். தலைவர்கள் தங்கள் பதவிகளை வைத்து அப்பாவி மக்களை சுரண்டிக்கொண்டும் மக்களின் துன்பங்களுக்கும் உரிமையின்மைக்கும் காரணமாயிருந்தனர். நேர்மையுடன் வழி நடத்த வேண்டிய ஆட்சியாளர்கள், அதிகாரப் பதவிகளைப் பயன்படுத்தி அடக்குமுறையாளர்களாக மாறிவிட்டனர்.
நீதி என்பது கடவுளால் விதிக்கப்பட்ட ஒரு நியமமாகும். இங்கு ஆட்சியாளர்கள் தங்கள் பொறுப்புகளை நேர்மையோடு செய்யத் தவறியதற்காக கடவுள் எசேக்கியேல் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார். தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள மக்களை வஞ்சிக்கிற ஆட்சியாளர்கள் கடவுளுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இஸ்ரவேலின் அதிபதிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைச் சுரண்டி கொடுமைப்படுத்தி கொள்ளையிடுகிறவர்களாக இருந்துள்ளனர். கடவுள் அவர்களை நியாயத்தையும் நீதியையும் செய்யும்படி அழைக்கிறார்.
இஸ்ரவேலரின் ஆட்சியாளர்கள் முன்மாதிரியான நீதியுள்ள தலைவர்களாக இருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்த்தார். நீதியை நிலைநிறுத்துவதில் அவர்கள் தோற்றபோது அவர்கள் கடவுளின் அழைப்புக்குப் பாத்திரராய் இல்லாமற் போனார்கள். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது என்பது கடவுளுக்கு எதிரான பாவமாகும். உண்மையான தலைமை என்பது அனைத்து மக்களையும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்களையும் நியாயமான முறையில் நடத்துவதை உள்ளடக்கியது. இயேசுவில் கடவுளின் பிள்ளைகளாக நீதியின் வழியில் நடந்து அன்பைப் பகிர்ந்து வாழுவோம்.
நீதியின் கடவுளே! நீதி நியாயத்துக்கான உமது அழைப்பை ஏற்று, அநியாயத்தை அழிக்க உமது பலத்தை எங்களுக்குத் தாரும். சரியானதை பகுத்தறிந்து பாதிக்கப்படக்கூடியவர்களுக்காகப் போராடி நீதியைப் பெற்றுத்தர உம் வல்லமையை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
