எபேசியர் 6 : 14-17       2 ஜூலை, 2021 வெள்ளி

“நீதியைத் தரித்து கொண்டேன். அது எனக்கு ஆடையாயிற்று. என் நியாயம் எனக்கு அங்கியும் பாகையுமாயிற்று.” – யோபு 29:14

மனிதர்கள் ஆடை அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
ஆடைகளுக்கு ஏராளமான விளம்பரங்கள் காணப்படுகின்றன. எல்லா
தரப்பினரும் நல்ல ஆடைகளை வாங்கி அணிந்திட விரும்புகின்றனர்.
இக்காலத்தை ஆடைகள் பேரில், மோகம் கொண்ட காலம் எனலாம்.

இன்றைய தியானப்பகுதியில், நாம் தரித்துக் கொள்ள வேண்டிய நீதியின்
ஆடையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் யோபு என்பவர். ‘நீதியை
ஆடையாகத் தரித்துக் கொண்டேன்’ என்று சொல்லுகின்றார். எப்படி,
நமது உடலும், ஆடையும் பொருந்தியிருப்பது போல, நீதி நமது
உள்ளத்திலும், வாழ்விலும் இணைந்திருக்கிறதா? யோபு துன்பத்திலும்
நீதியைக் கை விடவில்லை. ‘நீதியினிமித்தம் துன்பப்படுவோர்
பாக்கியவான்கள்’ என்று இயேசு சொன்னார். மத்தேயு 6:33 முதலாவது
தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள்’ என்கிறது.

நீதி, கடவுளின் பிள்ளைகளின் அலங்காரமான ஆடை. நீதியற்றவன்
ஆன்மீக நிர்வாணி. கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்ப்பு நமது
பாவங்களுக்கும், தண்டனைகளுக்கும் பரிகாரமாகி, நம்மை
நீதிமானாக்குகிறது. இலவச தேவ நீதியைப் பிறருக்கு அறிமுகப்படுத்திட
நாம் அழைக்கப்படுகிறோம்.

இன்று உலகில் பல திருச்சபைகளில் நீதி, நியாயம் இல்லை. சபை என்பது
ஒரு வியாபாரமாகிவிட்டது. நீதியை நிலைநாட்ட இயலாதபடி நீதி
தேவதையின் கண்கள் திருச்சபையிலும் நீதிமன்றங்களிலும்
கட்டப்பட்டுள்ளன என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். நீதியாய் வாழ
விரும்புகிறவர்களைப் பிழைக்கத் தெரியாதவர்கள் என்கின்றனர் பலர்.

இயேசு கிறிஸ்து நீதியின் சூரியன். நீதிக்காகப் போராடி, மரித்து,
உயிர்த்து, ஜெயித்தவர். நீதியாக வாழ்ந்து நீதியில்லாத நமக்கு நீதியாகி,
வெற்றியை வழங்கினவர். அவரால் இலவச நீதி நிலைநாட்டப்பட்டது.
இயேசுவில் விசுவாசம் உள்ள யாவரும் நீதியின் ஆடையைத் தரித்து வாழ
கடவுள் அழைக்கிறார். எவ்வளவு விலையேறப்பெற்ற புற ஆடையை
அணிந்திருந்தாலும், கடவுளின் நீதியின் ஆடையை அகத்தில் தரித்து
கொண்டவர்களை அவர் ஏற்றுக் கொள்கிறார்.

நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டும்படி
இயேசுவை உலகுக்குத் தந்தவரே, நன்றி! நாங்கள்
உமது இலவச நீதியின் ஆடையைத் தரித்து நீதியான
வாழ்க்கை வாழ எங்களுக்கு உதவும் ஆமேன்.