கலாத்தியர் 2 : 15-20 ஜூன் 7, 2020 – ஞாயிறு
“கிரியை செய்யாமல், அவபக்தனை நீதிமானாகத் தீர்க்கிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனுக்கோ அவன் விசுவாசமே நீதியாக எண்ணப்படும்.” ரோமர் 4 : 5
ஆச்சரியமான கிருபை (Amazing Grace) என்ற புகழ் பெற்ற ஆங்கிலப் பாடலை எழுதிய ஜான் நியூட்டன் இளவயதில் கப்பல் படை வீரராக இருந்தார். இவர் ஒரு நாத்திகர். இவர் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை ஏற்றி வரும் கப்பலின் தலைவராக நியமிக்கப்பட்டார். அடிமைகளை ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் புயலில் சிக்கியது. இவர் தான் கற்ற அனைத்து நுணுக்கங்களையும் கையாண்டார். ஆனால் தன்னுடைய திறமைகள் அனைத்தும் வீண் என்று கண்டார். கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற முடிவிற்கு வந்தார். கடவுளிடம் மண்டியிட்டார். பாவங்களை அறிக்கை செய்து இயேசுவுக்குள் வழிநடத் தப்பட்டார். புயல் அமர்ந்தது. மனித அறிவு, மனித முயற்சிகள் மனித ஈடேற்றத்திற்கு வழிவகுக்காது என்பதைப் பிறருக்குக் கூறத் துவங்கினார்.
மனித முயற்சிகள், சமய வழக்க ஒழுக்கங்கள் மனிதனை இரட்சிப்புக்குள் வழிநடத்தாது. இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசமே நம்மை இரட்சிப்புக்கு வழிநடத்தும் என்பதை தெளிவுபடுத்துகிறது தியானப்பகுதி. யூதர்கள் தாங்கள் கடவுளின் மக்கள். கடவுளின் சட்டத்தைப் பெற்றவர்கள். சட்டத்தைக் கடைபிடிப்பதால் கடவுளின் அன்பைப் பெறலாம். இரட்சிக்கப்படலாம் என்று நம்பினர். இதற்காகப் பல பலிகளைச் செலுத்தினர். கடவுளின் அன்பு இயேசு கிறிஸ்துவில் வெளிப் படுத்தப்பட்டதை யூதர்கள் ஏற்க மறுத்தனர்.
மனித ஈடேற்றத்திற்குப் பல முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. நல்ல செயல்கள் செய்வதால், புண்ணியத்தலங்கள் செல்வதால், தங்களின் அறிவைச் சார்ந்திருப்பதினால் மீட்புப் பெறலாம் என்று எண்ணுகின்றனர். தங்களின் பணம் தங்களை மீட்கும் என்றும் சிலர் கருதுகின்றனர். சில வெளியரங்கமான செயல்பாடுகளினால்தான் இயேசு கிறிஸ்துவில் நாம் இரட்சிப்புப் பெற்றிட முடியும் என்றும் சிலர் போதிக்கின்றனர்.
கிருபையினாலேயே விசுவாசத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது கடவுளின் ஈவு (எபேசியர் 2 : 8) என்பது திருவாக்கு. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே இரட்சிப்பு கிடைக்கிறது என்பதை உணர்வோம். இயேசுவே வாழ்வு! வழி! இரட்சிப்பு! இயேசுவால் மட்டுமே நாம் நீதிமானாக்கப்படுகின்றோம். இந்த நம்பிக்கையில் நிலைத்திருப்போமாக.
பிதாவே! அவபக்தனான என்னை உமது அன்பினால் இயேசு கிறிஸ்துவில் நீதிமானாக ஏற்றவரே உமக்கு நன்றி. இயேசு வழியே ஆமேன்.
