ரோமர் 5 : 5-9              17 மார்ச் 2021, புதன்

“அவர் இரத்தத்தினாலே இப்பொழுது நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டிருக்க…” – ரோமர் 5 : 9

கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் கடவுளைப் போல ஆக வேண்டும் என்ற ஆசையினால் தன் சாயலை இழந்து, கடவுளின் கோபத்துக்கு ஆளானான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். கடவுளின் கட்டளையை மீறிய செயலை பாவம் என்று திருமறை சொல்லுகிறது. ஆதாம் ஏவாள் பாவம் செய்ததால் பாவம் எல்லாருக்கும் பரவியது. கடவுள் மனிதன் மீது இரக்கங் கொண்டு அவனை மீட்கத் திட்டம் வகுத்தார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற மனுக்குலத்தோடு கடவுள் இணைந்து செயலாற்றினார். உலக வரலாற்றை ஆயத்தம் செய்தார். இயேசு பிறந்தார். தாமே வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை பலமுறை தெளிவுபடுத்தினார். என்றாலும் மக்கள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் கல்வாரி சிலுவையில் மனுக்குலத்தின் பாவங்களை தம்மீது ஏற்று இரத்தஞ்சிந்தி மரித்தார்.

மனுக்குலம் குற்றவாளியாக நின்று கொண்டிருக்கிறது. தண்டனை அறிவிக்கிற நேரத்தில் ஒருவர் வந்து, இந்தக் குற்றங்களை நான்தான் செய்தேன் என்று ஏற்கிறார். நீதிபதி குற்றவாளியை விடுவிக்கிறார். குற்றத்தை ஏற்றுக் கொண்டவர் தண்டிக்கப்படுகிறார். இதைத்தான் இயேசு நமக்காகச் செய்தார். பாவஞ் செய்த மனுக்குலத்தின் பாவங்களை இயேசு தம் மீது ஏற்றுக் கொண்டார். மனுக்குலம் மீட்கப்பட்டது. இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இயேசு சிந்திய இரத்தம் நம்மை மீட்டது.

இயேசுவில் எனக்கு பாவ மன்னிப்பு உண்டு. இதற்காகவே பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் விசுவாசத்தை உருவாக்குகிறவர். அவர் வசனத்தைக் கொண்டு நம்மை இயேசுவிடம் வரவழைக்கிறார். நற்செய்தியால் விசுவாசத்தை உருவாக்குகிறார். எனவேதான் பவுலடிகளார் பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவரும் இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிட முடியாது என்று எழுதுகிறார். இயேசுவை அனுப்பி நம்மை மீட்டதால் கடவுள் நம் மீது வைத்த அன்பை வெளிப்படுத்தினார். நாம் கடவுளிடம் அன்பு கூர்ந்ததினால் அல்ல. அவர் நம்மீது அன்பு கூர்ந்ததால் கடவுளின் அன்பை புரிந்து கொள்ளுகிறோம். கடவுள் இயேசுவில் நம்மீது காண்பித்த அன்பிற்காக அவருக்கு நன்றி செலுத்தி வாழ்வோம்.

அன்பின் பிறப்பிடமான கடவுளே! உமது அன்பை இயேசுவில் வெளிப்படுத்தி எங்களை நீதிமான்களாக்கியிருக்கிறீர். நாங்கள் பெற்ற மன்னிப்பின் நிச்சயத்தோடு வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.