1 கொரிந்தியர் 15 : 35-38 16 பிப்ரவரி, 2018 வெள்ளி
“என் தோல் முதலானவை அழுகிப் போனபின் தசையில்லாதவனாகவே நான் கடவுளைத் தரிசிப்பேன்.” – யோபு 19 : 26
யோபு என்றொரு பக்தன், உத்தம வாழ்க்கையை நடத்தி வந்தான். அவரை பிசாசு சோதித்தான். குடும்பத்தில் பலர் இறந்தனர். ஆஸ்திகள் அழிந்தன. சரும வியாதியும் யோபுவை விட்டு வைக்கவில்லை. ஆனால் யோபு, விசுவாசத்தைத் தெளிவாக உறுதியாக அறிக்கையிட்டார். `என் தோல் முதலானவை அழுகிப்போனபின் தசையில்லாதவனாகவே நான் கடவுளைத் தரிசிப்பேன்’ என்றார். மரணத்திற்குப் பின்பும் இறைவனைக் காண்பேன் என உறுதியாக நம்பினார். மனிதன் மரணத்தின் மூலம் சரீரத்தை இழக்கிறான். மரணத்திற்குப் பின்பும் மனிதன் கடவுளோடு வாழ்கின்றான். இதுவே அழியாத பேரின்ப வாழ்வு! இதை யோபு அறிந்திருந்தார். நமக்கும் சொல்கின்றார். விதை நிலத்தில் விழுந்தால் அது அழிந்து புதுச்செடியாக முளைப்பது போல, மனிதனும் புத்துயிரோடு எழும்புகிறான், இந்நிலையே உயிர்த்தெழுதல். உயிர்த்தெழுதலின் முதற் பலன் இயேசுகிறிஸ்து. அழியா வாழ்வின் துவக்கம் இங்கேயே! இப்பொழுதே! துன்பம் இருக்கலாம். தொல்லை இருக்கலாம், வியாதி இருக்கலாம். ஆனால் இவற்றோடு உயிர்த்த இயேசு இருப்பதால், நம்மிடம் அழியாப் பெருவாழ்வு துவங்கியிருக்கிறது. பாவமேதும் செய்யாத ஆண்டவர் நமக்காக ஏற்றுக்கொண்ட வலிகளை வேதனைகளை நினைத்துப் பார்ப்போம். ஆண்டு முழுவதும் நாம் அனுபவிக்கும் சமாதானம் சிலுவையை நினைத்துப் பார்க்கும் இந்த நாட்களில் நமக்குள் உருவாகட்டும்.
அழிவற்ற நிறைவான வாழ்க்கையை இயேசு நமக்கு அறிமுகப்படுத்திவிட்டார். அழியாப் பெருவாழ்வு இன்று இங்கே இப்பொழுதே கடவுளின் அருளால் துவங்குகின்றது. நம்புகிறீர்களா? சாவுக்குப் பின் கடவுளைத் தரிசிக்குமுன்பு, இப்பொழுதே கடவுளைத் தரிசிக்கிறீர்களா? நீங்கள் பாக்கியவான்.
கர்த்தாவே, குறைவுள்ள வாழ்க்கையிலும் நிறைவுள்ள வாழ்வின் துவக்கத்தை தந்தவரே, அவ்வாழ்வினை முழுமையாக அனுபவிக்க எங்களை ஆயத்தப்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.
