1 கொரிந்தியர் 5 : 7-9                                                 17 அக்டோபர், 2021 ஞாயிறு

“கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் நிறைந்து வாசமாயிருப்பதாக.” – கொலோசேயர் 3 : 16

நாம் பயணம் செய்யும்போது இருக்கையில் அமர்ந்திருக்கிறோம். ஆனால் அது ‘வாசம் பண்ணுதல்’ ஆகாது. ரயிலில் பயணம் செய்யும் போது படுத்துத் தூங்கத்தான் செய்கின்றோம். அதுவும் ‘வாசம் பண்ணுதல்’ ஆகாது. ஆனால் வீட்டிலே நாம் உறங்கவோ, உட்காரவோ இல்லாது உலாவிக்கொண்டிருந்தால்கூட அங்கு நாம் வாசம் பண்ணுகிறோம் என்று தான் பொருள். வாசமாயிருத்தல் என்பது விருந்தாளியைப்போல வந்து போவதல்ல. கொஞ்ச நேரம், ஏதோ ஒரு அவசியத்துக்காக ஒரு இடத்தில் இருப்பதல்ல; நிரந்தரமாக, விட்டு விலகாது நிலைத்திருப்பதையே வாசம்பண்ணல் என்ற சொல் குறிக்கின்றது. கிறிஸ்துவின் வார்த்தை நம் வாழ்வில் நிறைந்து வாசமாயிருக்க வேண்டுமென்பது கடவுள் விருப்பம். இதுதான் தியானவரியின் கருத்து.

நமது வாழ்வில் தேவ வசனம் நிறைந்து வழிய வேண்டும். நாம் இவ்வுலகில் வாழும் போதும், பின்னர் உயிர்த்தெழுந்து ஆண்டவரோடு வாழும் போதும் அவருக்கு ஏற்புடையவர்களாய் வாழவேண்டியவர்கள். திருவசனத்தோடு நன்கு பழகி, அதையே நமது வாழ்க்கை இலக்கணமாக்கி வாழ்வதில் கடவுளுக்கு உரியவர்களாவோம்.

கொலோசே நகர கிறிஸ்தவர்கள் வாழ்வில் கடவுளின் வார்த்தை இடம் பெற்றிருந்தது. ஆனால் அது அவர்கள் வாழ்க்கை முழுவதையும் நிறைக்கவில்லை. ஆகவே அந்த கிறிஸ்தவர்களுக்கு நிர்மல வசனம் உங்களை நிறைக்கட்டும் என்று எழுதினார்.

ருசூடீ எனும் உலக நாடுகளின் கூட்டமைப்பில் எல்லா நாடுகளும் நிரந்தர உறுப்பினர் ஆகலாம். ஆனால் எல்லா நாடுகளுக்கும் இருக்கும் அங்கத்துவ உரிமை ஒன்று போல் இல்லை. முக்கியமான பிரச்சனைகளில் முடிவெடுக்கும்போது இவ்வித்தியாசம் தெரிகின்றது. நம் வாழ்வில் கடவுளின் வார்த்தைக்கு நிரந்தரமான இடம் வேண்டும். எக்காரியத்தையும் தீர்மானம் செய்யக்கூடிய பேச்சு, நடவடிக்கை யோசனை யாவும் கடவுளின் வார்த்தையால் வடிவமைக்கப்பட்டதாகவே இருக்கட்டும். ஆ… இது எத்துணை பாக்கியம்! உங்களுக்குள் கிறிஸ்துவின் வார்த்தை நிறைந்திருப்பதாக.

கடவுளே, உமது வசனத்தில் சார்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும், கடவுளின் வார்த்தையே என்னை வடிவமைக்கவும் நான் முன்வர என்னைப் பக்குவப் படுத்தும் நாதா! இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.