எபிரேயர் 3 : 10-12                         21 செப்டெம்பர், 2021 செவ்வாய்

“நாம் நியாயந்தீர்க்கப்படும்போதோ,… ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடி சிட்சிக்கப்படுகிறோம்.” – 1 கொரிந்தியர் 11 : 32

கொரிந்து சபையில் திருவிருந்து ஆசரிப்பதில் ஒழுங்கீனம் நடந்தது. இவ்வாறு நடந்து கொண்டால் கடவுளின் கோபம் பொங்கி எழும் என்பதை விளக்க பவுல் கண்டனக் குரல் எழுப்பினார். இதுவே தியானப் பகுதி. நடைமுறையில் உள்ள உண்மைகளை எடுத்துக் கூறினார் பவுலடிகள். திருவிருந்தில் பங்குபெறுமுன் ‘நம்மை நாமே நிதானித்தறிதல்’ – நமது பாவங்களைச் சோதித்தறிதல் தேவை. இல்லாவிட்டால் ‘இறையவர் தீர்ப்பு’ பெற வேண்டியிருக்கும். தீர்ப்புக்கு முன் கடவுளின் கண்டிப்பு, சிட்சை நம்மைச் சந்திக்கும் என்று எழுதினார் பவுல்.

சீர்திருத்தத் திருச்சபையின் முதல் இந்திய இறைப்பணியாளர் அருள்திரு. பர்த்தலோமெயு சீகன் பால்க்கு தரங்கம்பாடியில் ஊழியம் செய்து வந்த காலத்தில், ஏழைக் கைம்பெண் ஒருத்திக்கு இழைக்கப்பட்ட அநீதியைத்தடுத்தார். அதற்காக டேனிஷ் ஆளுநர் ஹசியுஸ் என்பவர் சீகன் பால்குக்கு சிறைத் தண்டனை வழங்கினார். ஆளுநரின் பிறந்த நாள் குறித்து அறிந்தபொழுது, அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் சீகன் பால்கு. ‘தாங்கள் எனக்குச் சிறைத் தண்டனை வழங்கியதால் நான் மனக்கசப்பு அடையவில்லை. என்னைப் பகைக்கிறவர்களை நான் நேசிக்கிறேன். தாங்கள் சிறைச்சாலைக்கு வரும்படி வேண்டுகிறேன்’ என்று கடிதம் எழுதினார். ஆளுநர் சிறைச் சாலைக்கு வந்து இறைப் பணியாளரைக் கண்டு, பகை மறந்து நட்புக் கரம் நீட்டினார்.

இறைவன் ஆக்கினைக்குள்ளாகாதபடி நம்மைப் பாதுகாக்கிறார். இதற்காக சிட்சிக்கிறார். நம்மை நாமே சோதித்தறிய வேண்டும். நாம் ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாக இருந்தாலும் சுய பரிசோதனை நம்மை ஆக்கினைத் தீர்ப்புக்கு விலகி வாழ வழி நடத்தும்.

சுய பரிசோதனைக்கு, ஆவியானவரே நமக்குத் துணை. சகல பாவங்களையும் கண்டித்து உணர்த்துபவர் ஆவியானவர்தானே! கண்டிக்கட்டும்! கண்டனம் செய்யட்டும். சிட்சிக்கட்டும். பெரிய ஆக்கினையிலிருந்து இவை நம்மைத் தப்புவிக்கும்.

உலகை நியாயம் தீர்க்க வரப்போகிற இறைவா, நாங்கள் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுதலை பெற எமக்கு உதவி செய்யும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.