மத்தேயு 3 : 13-17 7 பிப்ரவரி, 2018 புதன்
“கடவுள் அவரோடிருந்தபடியால் அவர் நன்மை செய்கிறவராயும்…. குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்.” – அப்போஸ்தலர் 10 : 38
பண்டைத் தமிழ் நாட்டில் பாரி என்னும் மன்னர் ஒருவர் பரிவும், இரக்கமும் கொடைத்தன்மையும் உடைய மன்னனாக விளங்கினார். முல்லைக் கொடி ஒன்று படர இடமின்றி தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். தான் ஓட்டிவந்த தேரை முல்லைக் கொடி படர்வதற்கு தானமாகக் கொடுத்தார் என்பது கதை.
சார்ந்து வாழ்வது மனித இயல்பு. சார்ந்து வாழ வழி இல்லையெனில் மனிதனுக்கு வாழ்வு இல்லை என்பதும் உண்மை. நாம் சார்ந்து வாழத் தகுந்த ஆதாரம் இயேசு. இயேசு நமக்காக, நமது பாவங்களின் பதிலாளாக இறந்தவர். நம்மைப் புரிந்து கொண்டவர் இயேசு. என்றும் நம்முடன் வாழ்பவர் இயேசு. பரிதவிக்கக் கூடிய விதத்தில் நமது வாழ்வு அமைந்துள்ளது. நமது நிலைமைகளைப் பரிவோடு கவனிப்பார் இல்லை. நமக்கு உதவியும் ஆதாரமும் காட்டுவோர் இல்லை. இப்படி நாம் நினைக்கிறோம். சாய்ந்து அழ ஓர் தோளும், முகம்புதைத்து அழ ஓர் மடியும் கிடைக்காதா என ஏங்குகிறோம். மனித வாழ்வை ஓர் திராட்சைக் கொடியாக இயேசு கண்டார். திராட்சைச் செடி நானே என்றார் இயேசு. இயேசுவிலிருந்து வளரும் கொடிகள் அச்செடியிலேயே படர்ந்து வாழ்வதும் இயல்புதானே.
கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம், அவரிடமிருந்து மீட்பைப் பெற்ற நாம் எவற்றைச் சார்ந்து வாழுகின்றோம். பணம், பதவி, சாதி, அதிகாரம், குடும்பப் பெருமை இப்படி நாம் சார்ந்திருக்கும் சக்திகள், இயக்கங்கள் எத்தனையோ அல்லவா? ஒரு சிலர் பிறரைச் சேராமல், பிறரைச் சேர்க்காமல் இயங்கும் சுயநலபாண்டங்களாகவும் இருக்கிறார்கள். அவர்களாலும் யாருக்கும் நன்மை கிடைக்காது.
இயேசு கிறிஸ்துவைச் சார்ந்து வாழ்வதால் அவர் நம்மை முழுமைப்படுத்துகிறார். நமக்கு நன்மை செய்கிறார். நமது வாழ்வியல் சவால்களைச் சகிக்கவும், தாங்கவும் தாண்டிவரவும் நமக்கு பலம் தருகிறார். நாம் பிறருக்கும் பயன்படும் மக்களாகவும் வாழ, நாம் சார்ந்துள்ள இயேசு நம்மைத் தினமும் மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறார்.
ஆண்டவரே எங்கள் வாழ்வில் நீர் ஓர் பிடிப்பாய் ஆணிவேராய், சுமைதாங்கியாய் இருப்பதற்காக நன்றி செலுத்துகிறோhம். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே ஆமேன்.
