எபிரேயர் 6 : 6-8                        07 அக்டோபர், 2021 வியாழன்

“இனிவரும் பலனை நோக்கினவனாய்,….. கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையையே அதிகச் செல்வமென்றெண்ணினான்.” – எபிரேயர் 11 : 26

‘கையில் கிடைத்த ஒரு புறா காட்டிலிருக்கும் இரு புறாக்களுக்கு சமம்’ (ய bசைன in hயனே றடிசவா வறடி bசைனள in வாந ரௌh) என்ற மனப்பான்மையோடு தான் பொதுவாக யாவரும் வாழ விரும்புகின்றனர். ‘இன்று’ எனக்கு என்ன கிடைக்கும், எவ்வளவு வெற்றி, லாபம், இன்பம், புகழ், பாராட்டு கிடைக்கும் என தற்காலிக ஆதாயங்களையும் சுகத்தையுமே பெரிதென பலர் நம்புகின்றனர்.

ஆனால் கடவுளை நம்பி, அவரையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழும் வாழ்க்கையில் புதிய கண்ணோட்டம் காட்டப்படுகிறது. தற்காலிக சுகத்துக்கும், மேன்மைக்கும் தரப்படும் முக்கியத்துவத்தை விட ‘இனி வரும்பலன் என்னமாயிருக்கும்’ என்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதுதான் தியான வரியின் பொருள். கடவுளோடிணைந்து நின்ற தொலைநோக்குடன் ‘நிரந்தரமான – முடிவான பலன் எப்படி இருக்கும்’ என முன் கூட்டியே கண்டு அதற்கேற்ப நிகழ்கால நிகழ்வுகளில் பங்கேற்பதில், மோசே போன்ற மாவீரர்கள் நமது மாதிரிகள்.

விரல் விட்டு எண்ணத் தக்க உலகப் பெரும் தலைவர்களுள் ஒருவர் மோசே. பிறப்பால் ஒரு எபிரேய அடிமை. ஆனால், அறியாப் பருவத்திலேயே எகிப்திய அரண்மனையின் சொகுசு வாழ்க்கை, பாதுகாப்பு, இன்பம், பெருமை யாவும் மோசேக்குக் கிடைத்தன. இளவரசனையும் மிஞ்சி அரசனுக்கு அடுத்த அந்தஸ்தும், உரிமையும் அவரைத் தேடி வந்தது. ‘தான் அரச பரம்பரையைச் சார்ந்தவனல்லன். எபிரேய குலத்து சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவனே’ எனும் உண்மை மோசேக்குத் தெரியவந்தது. அடிமைகளென நிந்திக்கப்பட்டாலும் இனி வரும் பலனை எதிர்பார்த்து, தன் சொந்த ஜனமான எபிரேய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதே பாக்கியம் என்று முடிவெடுத்தார். எபிரேய விடுதலை வேண்டி அண்ணன் ஆரோனுடன் அரண்மனைக்குள் சென்ற போது நிந்திக்கப்பட்டார். அரண்மனைவாசியாகத் தொடர்ந்திருந்தால் எகிப்து நாட்டு இளவரசர்களில் ஒருவனாக மட்டும் இருந்திருப்பார். ஆனால் நீதிக்காக, சுதந்திரத்துக்காக, மீட்புக்காக, சமத்துவத்துக்காகக் குரல் கொடுத்ததினிமித்தம் வந்த நிந்தனைகளை பெரும் செல்வம் என்றே கருதி உறுதியான விசுவாசத்தோடு மோசே வாழ்ந்தார். பணியாற்றினார். அப்படிப்பட்ட மோசேயின் பெயர் இன்றும் போற்றுதற்குரிய பெயராகவே விளங்குகிறது. மோசேயின் விசுவாச உறுதி நம்மிலும் விளங்க ஆவியானவர் அருளட்டும்.

பரம பிதாவே, கிறிஸ்தவ விசுவாசத்தினிமித்தம் வரும் சலுகை இழப்புகள், மற்றும் நிந்தைகளைப் பொறுத்துக் கொண்டு இயேசுவை மறுதலிக்காமல் நல்ல பலனை எதிர்நோக்கி வாழத் துணை செய்யும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.