2 கொரிந்தியர் 2 : 14-17             26 நவபர்ம் 2025, புதன்

“கடவுளுக்கு நாங்கள் கிறிஸ்துவின் சுகந்த வாசனையாயிருக்கிறோம்.” – 2 கொரிந்தியர் 2 : 15

வாசனை திரவியங்கள் இன்று அதிகமாக பயன்பட்டு வருகிறது. வள்ளுவர் கூறுகிறார் புறந்தூய்மை நீரால் அமையும், அகத்தூய்மை வாய்மையால் காணப்படும். நம்முடைய உடலை நீரால் கழுவி சுத்தப்படுத்தலாம். அகம் என்ற இருதயத்தின் தூய்மை உண்மை பேசுவதால் சுத்தப்படுத்தப்படும் என்ற குறள் மிக சிறப்பானதாகும்.

கடவுளுக்கு நறுமண வாசனையாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என உணர்வோம். நம்மிடம் காணப்படும் உண்மை, நேர்மை, பரிசுத்தம், நீதி, நியாயம், பிறருக்கு உதவி செய்தல் இவை அனைத்தும் மிகுந்த கனிகளைக் கொண்ட வாசனை குணங்களாகும்.

மோசே கடவுளின் சித்தத்தை செய்வதற்காக பொறுமை என்னும் வாசனையாக வாழ்ந்தார். யோசேப்பு கடவுள் தன்னைப் பார்க்கிறார் என்ற பயத்துடன் வாழ்ந்து பாவ இச்சையில் விழாமல் பரிசுத்தம் என்ற வாசனையாக வாழ்ந்தார்.

ஆபிரகாம் விசுவாசம் என்ற வாழ்வை வாழ்ந்து கடவுளுக்கு வாசனையாக வாழ்ந்தார். அதன் மூலமாக 100வது வயதில் ஈசாக்கைப் பெற்றார். இன்று உலகில் நாம் ஆபிரகாமின் சந்ததியார் என்று அழைக்கப்படும் பாக்கியத்தைப் பெற்று தந்தார்.

நகோமியின் கடவுள், என்னுடைய கடவுளாக இருப்பார் என்ற நம்பிக்கையின் வாசனையாக ரூத் வாழ்ந்தார்.

தாவீது தவறை உணர்ந்து பாவ மன்னிப்பை பெற்று நறுமண வாசனையாக வாழ்ந்தார். அதனால் பாவங்களை கடவுளிடம் கொண்டு வரும்போது பாவங்களை மன்னிக்கிறார் என்ற மெய் ஞானத்தைப் பெற்று இருக்கிறோம்.

எஸ்தர் தன் ஜனத்திற்காக உயிர் தியாகம் செய்து துணிந்து கடவுளுக்கு வாசனையாக வாழ்ந்தார். இன்று நம் ஜனத்திற்காக வேண்டுதல் செய்ய வேண்டும் என கற்பித்தார். நம்முடைய வாழ்வு கடவுளுக்கு நறுமண வாசனையாக இருக்க வேண்டும்.

நாம் நம் குடும்பங்களுடன் ஒழுங்காக ஆலயத்திற்கு சென்று ஆராதிப்பதன் மூலம், காணிக்கைகள் செலுத்துவதன் மூலம், வீடுகளில் தினமும் குடும்ப ஜெபம், வேத வாசிப்பு போன்ற காரியங்கள் மூலம் கடவுளுக்கு நறுமண வாசனையாக திகழ்வோம்.

நம்முடைய முன்மாதிரியான வாழ்வு மட்டுமே கடவுளுக்கு நறுமண வாசனையாக இருக்க முடியும். பொய்யான வாழ்வு ஒருபோதும் கடவுளின் நாமத்திற்கு நறுமண வாசனையாக இருப்பதில்லை.

எப்பொழுதும் கிறிஸ்துவில், அவரின் பிள்ளைகளாய் வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! எங்கள் வாழ்வு உமக்கு நறுமண வாசனையாக காணப்பட மெய் வாழ்வை வாழ அருள்புரியும். இயேசுவின் வழியே, ஆமேன்.