ஏசாயா 10 : 27-34                                  23 அக்டோபர் 2025, வியாழன்

“நானே அதற்கு சுற்றிலும் அக்கினி மதிலாயிருப்பேன்.” – சகரியா 2 : 5

நாம் வாழும் உலகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. சாலை விபத்துக்கள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. புதிய புதிய நோய் தொற்றுகள் உண்டாகி வருகிறது. பல நாடுகளில் பஞ்சம் பெருகி வருகிறது. குறிப்பாக நமிபியாவில் ஒருவேளை உணவுக்கு லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். தினந்தோறும் பட்டினியால் செத்து மடிகின்றனர். இந்த உலகம் பாதுகாப்பற்ற உலகமாக உருமாறிவிட்டது. நாம் உயிர் வாழ்வதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை. எனவே தினம் தினம் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறோம். ஆனால் இந்த நாளுக்குரிய தியானப் பகுதி கடவுளுடைய ஜனங்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

சகரியா தீர்க்கதரிசி கடவுள் எருசலேம் நகரத்தை எப்படி பாதுகாக்கிறார் என்று விவரிக்கிறார். எருசலேம் நகரம் முழுவதையும் கடவுள் அளந்து வைத்திருக்கிறார். அதில் கூடிவருகிற மக்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார். நகரத்தை சுற்றிலும், கூடிவருகிற திரள் மக்களுக்கு அரணாக இருக்கிறார். அக்கினி மதிலாய் இருப்பேன் என்று கடவுள் குறிப்பிடுகிறார். தீயைத் தாண்டி ஒருவரும் வர முடியாது. கடவுள் அக்கினி மதிலாய் பாதுகாக்கிறார். எருசலேம் நகரத்திற்கும், எருசலேம் நகரத்தில் கூடி வருகிற மக்களுக்கும் மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் அவரே பாதுகாவல். வீட்டை சுற்றிலும் காவலாளர்கள் நிற்கலாம். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். பாதுகாப்பு கர்த்தரிடத்திலிருந்தே வரும்.

வீட்டின் பாதுகாப்பைப்பற்றிய கவலை நமக்கு இருக்கலாம். பிள்ளைகளின் பாதுகாப்பைப்பற்றிய கவலை இருக்கலாம். கவலைகளை ஒதுக்கி வைப்போம். அக்கினி மதிலாய் கடவுள் நம்மை சுற்றி இருக்கிறார். சிங்காசனத்தை விட்டு மெய்யான மனிதனாக இவ்வுலகத்திற்கு இயேசு கிறிஸ்து வந்தார். நமக்காக பாடுபட்டார். நமக்காக மரித்தார். நமக்காக உயிர்த்தெழுந்தார். நம் ஒவ்வொருவருக்காக பிதாவின் வலது பாரிசத்தில் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். உலகின் முடிவுவரை நான் உங்களோடு இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். அவரது பாதுகாப்பு நமக்குண்டு, தைரியமாய் வாழ்வோம்.

மகிமையின் பிதாவே, எங்கள் வாழ்வினில் வரும் இன்னல்களிலிருந்து எங்களை பாதுகாத்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.