1 இராஜாக்கள் 8 : 28-30                      23 அக்டோபர், 2021 சனி

“கடவுள்… பூமியில் வாசம் பண்ணுவாரோ… இந்த ஆலயம் உம்மைக் கொள்ளுவதெங்ஙனம்?” – 1 இராஜாக்கள் 8 : 27

படைப்பு முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவர் கடவுள். அப்படியானால் கோயிலின் நான்கு சுவர்களுக்குள் அவர் அடக்கப்படுவதெப்படி சாத்தியம்? நீளம், அகலம், உயரம் எனும் நம் அறிவுக்குப் புலனாகும் ஸ்தூல உடலின் பருமனை மனதிற்கொண்டு இக்கேள்வியை எழுப்பக் கூடும். கடவுளை நாம் இப்படிக் கணித முறையிலோ விஞ்ஞான ரீதியிலோ அளந்து பார்ப்பது ஏற்புடையதன்று. ஏனெனில், கடவுள் நம் உள்ளத்திலும் நம்மிடையேயுங்கூட வாழ்கின்றார்.

மூன்று தமிழ்க் கவிஞர்கள் தற்செயலாக ஒரு இடத்தில் சந்தித்தனர். பக்தி சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. திடீரென மழை பெய்தது. இருவர் மட்டும் நிற்கத் தக்க ஒதுக்கிடம் அருகில் இருந்தது. மிகுந்த சிரமத்தோடு மூவரும் அதற்குள் ஒதுங்கி நின்று உரையாடலைத் தொடர்ந்தனர். அவர்களிடையே மேலும் ஒருவர் இறுக்கமாக நுழைந்து வந்ததை, கண்ணுக்குத் தெரியவில்லையென்றாலும் மூவருமே நன்றாக உணர்ந்தனராம். இறைவன் தான் அந்த நான்காமவர் என்றறிந்து வியப்பும், பக்திப் பெருமிதமும் அடைந்தனராம் அம்மூவரும்.

இயேசுவில் தம்மை வெளிப்படுத்திய கடவுள், நம் உள்ளத்திலும் நம்மிடையேயும் வாசம் பண்ணுகிறார். ‘நீங்கள் கடவுளின் வீட்டார்’, ‘நீங்களே அந்த ஆலயம்’ என்பவை திருமறைக் கூற்று. பக்தர்களாக ஒன்று திரண்டு கடவுளைப் புகழ்ந்து பாடவும், கடவுளுக்கு நன்றி கூறவும், அவரிடம் வேண்டுதல் செய்யவும் மனிதருக்கு ஒரு இடம் தேவை. ஆகவே தேவாலயம் எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் நம்மிடையேயும் நமக்குள்ளும் இருக்கிறார் என்றுணர்ந்து கோயில் கட்டுவோம். கோயிலில் கடவுளை வழிபடுவோம். தமது பக்தர்களுக்காக கடவுள் நான்கு சுவர்களுக்குள் தன்னைக் குறுக்கிக் கொள்கிறார். கடவுளின் அன்புக்கும், அருளுக்கும் தோத்திரம். நம்மிடையே நிறைந்திருக்கும் கடவுளைக் கனம் பண்ணுவோம்.

ஆண்டவராகிய கடவுளே, எங்கள் உள்ளங்கள் உம் குடியிருப்பாகட்டும். எங்கள் கோயில்களிலும் உம்மைக் கண்டு வணங்க அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.