மலாக்கி 3 : 13-15                                         11 அக்டோபர் 2025, சனி

“தெய்வ பயமற்றவர்களாய் நடப்போர் பலத்து செழிக்கிறார்கள்.” – மலாக்கி 3 : 15

நல்லதுக்கு காலமில்லை. நன்மை செய்வதால் ஒரு பயனுமில்லை. என்றெல்லாம் நாம் புலம்புவதுண்டு. காரணம் இவ்வுலகில் நன்மை செய்வோர் அநேக பாடுகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் தீமை செய்வோர் மிக சுகமாய் வாழுகின்றனர். இந்த நிலை பல நேரங்களில் நமக்கு மன உளைச்சலையும் மனச் சோர்வையும் உண்டாக்குகிறது. நாமும் அவர்களைப்போல எப்படி வேண்டுமானாலும் வாழலாமே என்று சிந்திக்க வைக்கிறது. இப்படிப்பட்ட வாழ்வியல் சூழலைப்பற்றிதான் இந்த நாளுக்குரிய தியானப் பகுதி பேசுகிறது.

மலாக்கி தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் இஸ்ரவேலர்கள் முறையற்று வாழ்ந்தனர். கடவுள் பயமில்லாமல் வாழ்ந்தனர். கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் தங்கள் சுய இஷ்டப்படி வாழ்ந்தார்கள். கடவுளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்தாமல் சுய நலமாய் வாழ்ந்தனர். அதே நேரத்தில் பக்தி வைராக்கியத்தோடு வாழ்ந்த மக்களும் இருந்தனர். பக்தி வைராக்கியத்தோடு வாழ்ந்த மக்கள் துன்பங்களை அனுபவித்தனர். எனவே அவர்களுக்குள் இந்த கேள்வி தோன்றியது. இத்தனை அக்கிரமம் செய்தும் இவர்கள் நலமாகத்தானே இருக்கிறார்கள். சுய இஷ்டப்படி வாழ்ந்தும், கடவுளுடைய கட்டளைகளை மீறி வாழ்ந்தும் நலமுடந்தானே இருக்கிறார்கள் என்று புலம்பினர். மலாக்கி காலத்தில் வாழ்ந்த மக்களின் புலம்பல் மட்டுமல்ல இது.

நாமும்கூட பல நேரங்களில் இப்படி சிந்திப்பதுண்டுதானே. ஆனால் அது உண்மையல்ல என்று மலாக்கி உரக்க சொல்லுகிறார். அதாவது கடவுளிடத்தில் ஜீவ புத்தகம் என்ற ஒன்று உண்டு அதில் உண்மையோடும், நேர்மையோடும், பக்தியோடும் வாழ்கிறவர்களின் பெயர்கள் மட்டும் குறிக்கப்படும். அதில் தீமை செய்வோரின் பெயர் இடம் பெறாது என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.

தீமை செய்வோரை கடவுள் அங்கீகரிப்பதில்லை. அவர்களை புறந்தள்ளுகிறார். அவர்கள் செழிப்பும் வாழ்வும் நிரந்தரமல்ல. எனவே தீமை செய்வோரின் செழிப்பைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நமக்காக மண்ணுலகில் வந்து சிலுவை சுமந்து நம்மை மீட்டுக் கொண்ட கிறிஸ்துவில் விசுவாசம் வைப்போம். அவரது வார்த்தைகளின்படி வாழ்வோம். எத்தனை துன்பங்கள் வந்தாலும் பொறுத்துக் கொள்வோம். கர்த்தர் எல்லாவற்றிலுமிருந்தும் நம்மை மீட்டு சுகமாய் தங்கப்பண்ணுவார். ஜீவ புத்தகத்தில் நமது பெயர் இடம் பெறும். பொல்லாதவர்களை அல்ல, தேவ தாசர்களை முன்மாதிரியாய் கொண்டு தொடர்ந்து ஓடுவோம்.

அன்பின் கடவுளே, எத்தனை சோதனையிலும் நன்மை செய்கிறவர்களாய் வாழ எங்களை வழி நடத்தும். இயேசுவின் திருப்பெயரில் ஆமேன்.