எபிரேயர் 3 : 3-6 5 ஆகஸ்ட், 2021 வியாழன்
“தைரியத்தையும் நன்னம்பிக்கையினால்பெருமை பாராட்டுவதையும் உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்போமாகில் நாமே அவர் வீடு.” – எபிரேயர் 3 : 6
இயேசு, மோசேயிலும் பெரியவர். நமது குடும்பங்களை, திருச்சபை எனும் தனது குடும்பத்தை நிறுவியுள்ளார் இயேசு. இதை பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பம் என்றார் பவுல். இந்த இயேசுவின் குடும்பத்தில் நம்மில் பலர் உறுப்பினர்கள். இயேசுவின் குடும்பமாம் திருச்சபையில் எவருக்கும் இடம் உண்டு. திருச்சபை எனும் குடும்பம், இயேசு கிறிஸ்துவில் வைக்கும் நன்னம்பிக்கையிலேயே நிலைத்திருக் கின்றனர். நன்னம்பிக்கை என்ற சொல் நமது எதிர்கால நம்பிக்கையைக் குறிப்பதாகும். இரட்சகர் இயேசுவின் ஆற்றலுள்ள இரண்டாம் வருகை; அவரது நியாயத் தீர்ப்பு, தண்டனை போன்றவற்றைக் குறித்த நன்னம்பிக்கை திருச்சபைக் குடும்பத்தின் ஆதாரமாகும்.
இந்த நன்னம்பிக்கை கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் அடித்தளத்தில் தான் உள்ளது. நமக்கு நம்பிக்கைக் குறைவுகள் ஏற்படலாம். இதற்குத் தக்க காரணம் நமக்கு இருக்கலாம். ஆனால் நம் இரட்சகர் இயேசு எத்தனைப் பெரிய அதிகாரமுள்ளவர்! ஆற்றலுள்ளவர்! நமது குறைவான நன்னம்பிக்கையை நிறைவான நன்னம்பிக்கை ஆக்க வல்லவர் இயேசு. அந்தியோகியாவின் எபிபானஸ் அரசன் எகிப்தை முற்றுகையிட்டான். அப்போது ரோமப் பேரரசு பபில்லியஸ் என்பவரைத் தங்கள் தூதுவராக அனுப்பி போரை நிறுத்தச் செய்தி அனுப்பியது. எபிபானஸ், ‘நான் யோசிக்கிறேன்’ என்றான். ஆனால் பபில்லியஸ், எபிபானஸைச் சுற்றி ஒரு கோடு வரைந்தான். ‘முடிவைச் சொல்லிவிட்டு வட்டத்திலிருந்து வெளியேறும்’ என்றான். எபிபானஸ் பணிந்தான். பபில்லியஸ்ஸுக்கு எப்படி இத்தனை துணிச்சல் வந்தது? ரோமப் பேரரசு தூதுவருக்கு அளித்திருந்த அதிகாரம், பெரிய தைரியத்தைத் தந்தது.
அனைத்து ஆற்றலுமுள்ள இரட்சகர் இயேசுவின் பிள்ளைகள் நாம். அவரது ஆற்றலுள்ள வார்த்தையில் நம்பிக்கையுள்ளவர்களாக வாழ்வோம்! திருச்சபையில் நன்னம்பிக்கையில் தளர்ச்சி உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்களையும் உற்சாகப்படுத்துவோம்.
அனைத்து அதிகாரத்துக்கும் தலைவரே! எனது நன்னம்பிக்கையில் தளர்ச்சி ஏற்படுகிறது. நன்னம்பிக்கையில் தைரியமாக வளர்ந்திட என்னை உற்சாகப்படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.