எபிரேயர் 3 : 1-3                13 ஜுலை, 2021 செவ்வாய்

“அவருடைய நாமத்தை அறிக்கையிட்டு உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை …. செலுத்தக் கடவோம்.” – எபிரேயர் 13 : 15

‘இயேசுவே ஆண்டவர் என்று நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்’. இப்படி பவுல் ரோம் நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் வாசிக்கிறோம். இயேசுவே ஆண்டவர் என்று ஒருவர் செய்கிற அறிக்கையை ‘சுகந்த வாசனை காணிக்கையாக’ கடவுள் ஏற்றுக் கொள்கிறார். இரட்சித்திருக்கிற இயேசு கிறிஸ்துவின் ஆளுகைக்குள் இருக்கிறவர்களே இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிட முடியும்.

இன்னார் என் தந்தை என்று உறுதியாகச் சொல்லலாம். இந்தியா என் தாய் நாடு எனப் பெருமையுடன் கூறலாம். இயேசுவே என் ஆண்டவர் என்று உறுதியாகக் கூறுவது ஒருவரது திடமான விசுவாசத்தை காண்பிக்கிறது. விசுவாசிக்கிறவர் இயேசுவின் நாமத்தை ‘அறிக்கையிட வேண்டும்’ என்பதை தியானப் பகுதி நமக்கு உத்தரவிடுகிறது எனலாம். வாசிப்பு பகுதியிலும் ‘இயேசு கிறிஸ்து நமது விசுவாச அறிக்கைக்குரிய அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியனுமாயிருக்கிறார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாச அறிக்கை கடவுளுக்குப் பிரியமானது என்பது நமக்குத் தெரியும்.

ஆண்டவர் என்ற சொல் ஆளுகை செய்கிறவர் என பொருள்படும். என் ஆண்டவர் என்று சொல்லும் போது அவருடைய ஆளுகைக்கு உட்பட்டவராக, நாம் அவருக்குச் சொந்தமானவர்களாக அவரைச் சார்ந்து வாழ நாம் ஒப்புக் கொள்கிறோம் என்று பொருள். நம்மையே அவர் தமக்குப் பிரியமான காணிக்கையாக ஏற்றுக் கொள்கிறார்.

இப்படிக் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ‘விசுவாச அறிக்கை’யை உருவாக்கினவர்கள். ஆகவே விசுவாச அறிக்கையை முழு மனதோடும், உற்சாகத்தோடும், தைரியத்தோடும் அறிக்கை செய்ய வேண்டியது அவசியம். இயேசுவின் நாமத்தை அறிக்கை செய்யும் போது அவரே நமது இரட்சகர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம். அவருக்கு நாம் சொந்தம் என்ற உண்மையைப் பிறருக்கு அறிவிக்கிறோம். இந்த விசுவாச அறிக்கையில் வாழ்நாளெல்லாம் உறுதியாய் நிலைத்திட கடவுள் அருள் தரட்டும்.

துதிக்குப் பாத்திரராகிய கடவுளே, உம்மையும் உமது இரட்சிப்பையும் அறிக்கையிட்டு உமக்குப் பிரியமானவர்களாக வாழ்ந்து நன்றிப் பலிகளைச் செலுத்த உதவி செய்யும். ஆமேன்.