1 யோவான் 4 : 16-19 11 ஏப்ரல் 2021, ஞாயிறு
“உன் கடவுளாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்கு …மனப்பூர்வகாணிக்கையைச் செலுத்தி, …” – உபாகமம் 16 : 10
சங்கப் பணம், சந்தா, வரி போன்ற சொற்கள் இறையவருக்குக் கொடுக்கிற காணிக்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இது தவறாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மேற்ச் சொல்லப்பட்ட சொற்களில் ‘ஒரு கட்டாயம்’ சேர்ந்திருக்கிறது. ஆதாரப்பகுதி, மனப்பூர்வமாக ‘காணிக்கை செலுத்தி’ என்று விளக்குகிறது. மனம் நிறைந்து, தாராளமாக வழங்கப்படுவது காணிக்கை. இது மட்டுமல்ல. கடவுளின் ஆசீர்வாதத்தின் தொடர்ச்சி, கடவுளுக்கே கொடுக்கப்படுகிற காணிக்கை என்பதும் விளங்குகிறது. ‘தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், திராணிக்கு மிஞ்சியும் சுயேச்சையாய்க் கொடுத்தார்கள்’ என்று பவுலடிகள் மக்கதோனியா சபை பற்றி எழுதினார். காணிக்கை கடவுளுக்குச் செலுத்துவதன் சரியான விளக்கம் இதுதான். திருப்பணி நடைபெற, தருமம் செய்தல் தொடர காணிக்கை தேவைதான்.
தாவீது அரசன் எருசலேம் ஆலயம் கட்டத் தேவையான பொருள் வசதியைச் சேர்த்திருந்தார். ‘குவித்திருக்கிற இந்தப் பொருட்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்ததே. எல்லாம் உம்முடையதே’ என்று தாவீது கூறி காணிக்கைகளைப் படைத்தார். காணிக்கை என்பது ‘தொடர் ஆசி’!
ஆம்! காணிக்கை ‘நாம்’ கொடுக்கிறோம் என்று நாம் நினைக்கிறோம். பொருள் கர்த்தருக்கு உரியது. கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தார். பொருளைக் கொடுத்தார். அவரிடம் வாங்கின நீ அவருக்குக் கொஞ்சம் நன்றி செலுத்தும் முகமாகக் கொடுக்கிறாய். ஆம்! காணிக்கை என்பது ஆசியின் தொடர்ச்சி! காணிக்கையை நாம் குறைத்தால், கடவுளின் ஆசிக்கும் நாமே தடையாக இருப்போம். மனப்பூர்வமாகக் காணிக்கை படைப்போம்.
கர்த்தாவே, காணிக்கை என்பது எங்கள் செயல் அல்ல! அது உமது ஆசியின் தொடர்ச்சி என்று நாங்கள் புரிந்து கொள்ள உமது அருளைத் தாரும். ஆமேன்