ஏசாயா 55 : 6-9 21 நவம்பர், 2018 புதன்
“…நீ அவரைத் தேடுவாயானால், அவர் உனக்கு வெளிப்படுவார்;…” – 1 தினவர்த்தமானம் 28 : 9
1622-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்பேனிஷ் கப்பல் புயலில் சிக்கி மூழ்கியது. இந்த கப்பலில் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் நிரப்பப்பட்டிருந்தது. 1969-ம் ஆண்டு மெல்விஸ்ஸர் என்ற அமெரிக்கர் இக்கப்பலைத் தேடத் திட்டமிட்டார். இதற்காக ஒரு கப்பலை ஏற்பாடு செய்தார். 5, 10 வருடங்கள் என்று தேடல் நீண்டது. இறுதியில் 16 ஆண்டுகளுக்கு பின் கப்பலின் பெரும்பகுதியை கண்டுபிடித்தார்.
இந்த நாளின் சிந்தனை வசனம் தேடலை வலியுறுத்துகிறது. அரசன் தாவீது தன் மகன் சாலமோனுக்கு கொடுத்த முக்கிய ஆலோசனைகளில் ஒன்றுதான் இந்நாளின் சிந்தனை வாக்கியம். `தேடுதல்’ என்ற காரியத்தில் நேரம், முயற்சி, உழைப்பு அடங்கியிருக்கிறது. கடவுளை தேடுகின்ற காரியத்திற்கும் இது விதிவிலக்கல்ல. கடும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடலாம். ஆனால் நிச்சயம் கடவுள் வெளிப்படுவார். கடவுளை கண்டுகொள்ளுவதற்கு சிலர் குறுக்கு வழிகளை நாடுகிறார்கள். அதிக காணிக்கை கொடுத்தால் மிக எளிதாக கடவுளை கண்டுபிடித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அது தப்புகணக்கு. கடவுளைத் தேடுவதற்கு அடிப்படைத் தேவை மனந்திரும்புதல். இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்தபோது கடவுளின் பிரசன்னம் அவர்களை விட்டு விலகியது. மனந்திரும்பியபோது மீண்டும் கடவுளின் வழிநடத்துதல் அவர்களுக்குக் கிடைத்தது.
இரட்சகராகிய இயேசு தேடுதலின் முக்கியத்துவத்தை பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் (மத் 7:7) என்று மலைப்பிரசங்கத்தில் வலியுறுத்தினார். தேடுங்கள் என்று வலியுறுத்தின இயேசுவே நம்மைத் தேடிவந்தார். நாம் அவரைத் தேடுவதில் தளர்ந்து போய் இருக்கிறோமா? தொடர்ந்து தேடுவோம். அவர்மூலம் நமக்கு பாவமன்னிப்பு, விடுதலை, மோட்ச வாழ்வு உறுதி.
தேடுங்கள் என்றுரைத்த இறைவா! உம்மை தேடுவதற்கு ஒரு அற்புதமான காலத்தை தந்திருக்கிறீர். இதை பயன்படுத்தி உண்மையான மனமாற்றத்தோடு தேடி உம்மை கண்டுகொள்ள கிருபை புரியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
