1 கொரிந்தியர் 15 : 39-41                                16 செப்டெம்பர், 2021 வியாழன்

“இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே, விசுவாசமாயிருக்கிற எவருக்கும் பலிக்கும் தேவ நீதியே.” – ரோமர் 3 : 22

தியான வசனத்தில் இறைவனுடைய நீதியையும் மனிதனது அநீதியையும் குறித்துச் சொல்லுகிறார் பவுல். கிருபை என்றால் தகுதியில்லாதவர்கள் மேல் பாராட்டப்படுகிற இறைவனுடைய தயவு என்பது அர்த்தமாகும். எந்தப் பிரயோஜனமும் இல்லாத நம்மேல், இறைவன் அன்பு பாராட்டினாரே. அது தான் அவருடைய கிருபை. கிருபை என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் ‘ஹெயின்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்க மொழியில் ‘கேரில்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். நாம் பாவிகளாக இருக்கும் போதே இறைவன் நம்மைத் தேடி வந்தாரே. அது தான் அவருடைய கிருபை. தயவு, பொறுமை, நீடிய சாந்தம் என்பவை தேவ கிருபையின் வேறுபட்ட கோணங்கள். ஒருவன் எவ்வளவு அநீதி உள்ளவனாய் இருந்தாலும், கிறிஸ்து தமது நீதியை அவன் மேல் பொழிந்த வினாடியிலே அவன் இறைவனால் கறை திறையற்றவனாகி விடுகின்றான்.

ஆம், நமது அநீதி, அவரது நீதியை விளங்கப் பண்ணுகிறது. இது உண்மை. ஆண்டவர் இயேசு நமது அநீதியைத் தேடாமல், நினைத்துப் பார்க்காமல், நம்மைத் தொடுகிறார்; நமது பாவங்களை மன்னிக்கிறார். எல்லா அநியாயங்களையும் நீக்குகிறார். இயேசு நம்மைச் சுத்திகரிக்கிறார். அவர் உண்மையுள்ளவர், நீதியுள்ளவர், நம்மை நீதிபரராக்குகிறவர். நமது விசுவாசம் பலப்படட்டும்.

– அநீதிகள் ஒழியட்டும்.
– தேவ நீதி வெளிப்படட்டும்.
– சுய நீதி ஒழியட்டும்.

நாம் நித்திய வாழ்வில் பிரவேசிக்க தேவ கிருபை போதும். ஆண்டவர் கிருபை எவ்வளவு அருமையானது. அது நம் இருதயத்தைப் பரவசமடையச் செய்கிறது. அது எத்தனை மேன்மையானது. இனிமையானது. இந்த இலவச இரட்சண்யத்தில், தேவ கிருபையில் மட்டும் சார்ந்து வாழுவோம்.

இறைவா, உமது கிருபை எங்களுக்குப் போதும் என்ற உறுதியான விசுவாசத்தை எமக்குத் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.