அப்போஸ்தலர் 24 : 1-8 24 நவம்பர் 2020, செவ்வாய்
“பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடம் பிராது பண்ணினார்கள்.” – அப்போஸ்தலர் 24 : 1
பவுலடிகளார் ஆலோசனை சங்கத்தாரால் விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை கொலை செய்யும் திட்டத்தை சேனாதிபதியாகிய கிலவுதியு லீசியா அறிந்து அவரை தேசாதிபதியாகிய பேலிக்சினிடம் அனுப்பி வைத்தார். பவுல் சிலிசியா நாட்டைச் சேர்ந்தவர் என்று பெலிக்ஸ் அறிந்து, ‘உன் காரியத்தை திட்டமாய் விசாரிப்பேன்’ என்று சொல்லி பவுலை ஏரோதுவின் கோட்டை மாளிகையில் காவலில் வைத்தான். ஐந்து நாட்களுக்குப் பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா சில மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்ற வழக்கறிஞரோடும் சென்று தேசாதிபதியிடம் குற்றஞ்சாட்டினார்கள். பேலிக்ஸ் என்ற ரோம ஆளுநரின் முன் பவுலடிகளார் மீது குற்றம் சாட்டிய வழக்கறிஞர் தெர்த்துல்லு இவர் ரோமனா? கிரேக்கனா? யூதனா? என்று முடிவாகக் கூற முடியவில்லை என்றார். அதனால் தெர்த்துல்லு யூதனாயிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. ஒருவேளை வழக்குகளில் வாதாடுவதற்கென்று இவர் எல்லா சட்டங்களையும் படித்து பொது வழக்கறிஞராகவும் இருக்கலாம்.
தெர்த்துல்லு நல்ல மொழி நடையில், வசீகரிக்கும் பாணியில் பேச வல்லவர். பெலிக்ஸ்சின் முன் அரசியல் குற்றசாட்டுகளையே பவுலடிகளார் மீது சுமத்தினார். கொள்ளைநோய் மக்களை தொடர்ந்து பாதிக்கும். அதுபோலவே மக்களை இவன் பேச்சு பாதிக்கிறது. இதனால் இவர் ஒரு கொள்ளை நோய் என்றார். அடுத்து பவுலடிகளார் யூதருக்குள் கலகமூட்டுகிறான் என்றார். இறுதியாக நசரேய மதப் பிரிவுக்கு தலைவன் என்றார்.
நசரேய இயக்கம் ஒரு மேசியா இயக்கமாகும். அது ரோம அரசுக்கு எதிரானது என்று புரூஸ் அறிஞர் குறிப்பிடுகிறார். நசரேய இயக்கம் கிறிஸ்தவரைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். இயேசு நாசரேத்தூரார். ஆகையால் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவத்தை ஒரு மதிப்பில்லாத வெறுக்கப்படும் இயக்கமாக சித்தரிக்க தெர்த்துல்லு முயன்றார். அதுமட்டுமல்ல ஆலயத்தை இவன் தீட்டுப்படுத்தப் பார்த்தான், ரோமர்களால் அங்கீகரிக்கப்பட்ட யூத ஆளுகை மன்றத்தை எதிர்த்து கலகமூட்டுபவன் என்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால் பெஸ்து மரணதண்டனைக்கு ஏதுவான ஒன்றையும் பவுல் செய்யவில்லை என்று முடிவு செய்தார்.
அன்பானவர்களே நாம் கடவுளுக்குப் பயந்து அவர் வார்த்தையில் நிலைத்து வாழுவோம். யார் எந்த பொய்யான குற்றச்சாட்டுகள் சொன்னாலும், எதையும் வளைத்து திரித்து சொன்னாலும் அவைகளை கடவுள் கண்காணிக்கிறார். அவர் அவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்குவார். இந்த நிச்சயத்தில் வாழ்வோம்.
உலக நியாயாதிபதியாகிய கடவுளே, நாங்கள் என்றும் எப்பொழுதும் உம் வழிகளிலேயே நடக்க, வார்த்தையில் நிலை நிற்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
