1 கொரிந்தியர் 1 : 26-29 17 பிப்ரவரி, 2020-திங்கள்
“…தெபோராள் என்னும் தீர்க்கத்தரிசினி இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வந்தாள்.” – நியாயாதிபதிகள் 4 : 4
தற்காலத்தில் ஆண்களை போலவே பெண்களும் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு எல்லா துறைகளிலும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்வதில் நமது நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ முன்னேறிய இந்தக் காலத்திலேயே இப்படியென்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் எப்படிப்பட்ட நிலை இருந்திருக்கும். பெண்களை வீட்டிற்குள்ளே வைத்திருந்த காலம் அது. பெண்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ளாத காலம். கல்வி மறுக்கப்பட்ட காலம். அப்படிப்பட்ட காலத்திலேயே சில பெண்கள் தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்பதை நம்ப முடிகிறதா? அப்படி உருவான ஒரு தலைவியே தெபோராள் ஆவார்.
இஸ்ரவேலர் கானான் நாட்டில் குடியேறிய பின்னர் அவர்களை சில தலைவர்கள் நியாயம் விசாரித்து வந்தனர். அவர்களைப் பிற நாட்டவர்கள் அடிமைப்படுத்திய போதெல்லாம் இந்தத் தலைவர்கள் போரிட்டு மக்களை விடுவித்து வந்தனர். இவர்களே நியாயாதிபதிகள் என்று அழைக்கப்பட்டனர். ஒரு கால கட்டத்தில் தகுதியான ஆண்கள் தலைவர்களாக எழும்பவில்லை. அப்போது தெபோராள் நியாயாதிபதியாக மக்களை வழி நடத்தி வந்தார். இஸ்ரவேலர் கானான் நாட்டு அரசனுக்கு அடிமைப்பட்டு இருந்தனர். தெபோராள் பாராக்கு என்பவரை அழைத்து கானான் நாட்டுக்கு விரோதமாக போரிடச் செய்தார். தானும் அப்போரில் கலந்து கொண்டார். இஸ்ரவேலர் வெற்றி பெற்று விடுதலை அடைந்தனர்.
தன்னுடைய மக்களின் விடுதலைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் உழைத்தவர் தெபோராள். தைரியமான வழிகாட்டியாக விளங்கிய அவர் பணி மகத்தானது. தெபோராளைப் போல ஆற்றல் மிக்க பெண்கள் இன்றும் இருக்கின்றனர். அவர்களை அடையாளம் காணுவோம். பெண்தானே என்று தாழ்வாக எண்ணாதிருப்போம். பலவீனர்களையும் கடவுள் தம் பணிக்கென பயன்படுத்துகிறார் என்பதை மறவாதிருப்போம். நம்மை பலப்படுத்தி வழிநடத்துகிற கடவுள் நமக்கு உண்டு.
எங்களை பலப்படுத்தும் கடவுளே! பல காரியங்களை தனித்துச் செய்ய பலமில்லாதிருக்கிறோம். உம் துணையோடு வெற்றியுள்ள வாழ்வைப் பெற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
