லூக்கா 1 : 11-15 08 டிசம்பர் 2020, செவ்வாய்
“தூதனோ அவனை நோக்கி சகரியாவே, பயப்படாதே.” – லூக்கா 1 : 13
உலக ஆரம்பத்தில் கடவுள் நாம் காண்கிற மண்ணுலகையும், நாம் காணாத விண்ணுலகையும் படைத்தார். மண்ணுலகில் சிறந்த படைப்பு மனிதன். விண்ணுலகில் சிறந்த படைப்பு தூதர்கள். தூதர்கள் பரிசுத்தத்திலும், பாக்கியத்திலும் நிலைவரப்படுத்தப்பட்டவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். அதிக ஆற்றல் கொண்டவர்கள். தூதர்கள் என்ற பெயர் தன்மையைச் சுட்டிக்காட்டும் பெயரல்ல. அது செயலைக் குறிக்கும் பெயர். செய்தியைக் கொண்டு வரும் தூதர் என்பதே இதன் பொருள். கடவுளுக்கு ஊழியம் செய்பவர்கள். இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தம் ஊழியஞ் செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகள். இரட்சிப்பின் வரலாற்றில் முக்கிய செய்திகளை அறிவிக்கிறவர்கள் இவர்கள்.
நமது பார்வைக்கு தூதர்கள் தோன்றுவதில்லை. விண்ணக சேனை முழுமையும் கடவுளின் புகழைப் பாடுகிறார்கள். இந்த தூதர்களைக் கொண்டு கடவுள் உலகை ஆளுகிறார். தமது திருவுளத்தை நிறைவேற்றுகிறார். இவர்கள் விண்ணுலகையும் மண்ணுலகையும் இணைக்கிறவர்கள். மனிதர்களின் ஜெபங்களை கடவுளிடம் எடுத்துச் செல்கின்றனர். பாவிகள் மனந்திரும்பும் போது ஏற்படும் மகிழ்ச்சியில் பிதாவோடு தூதர்களும் பங்கு கொள்ளுகிறார்கள். கபிரியேல் தூதன் என்றால் கடவுளின் வீரர் என்று பொருள். இவர் இரண்டு முறை கடவுளின் செய்தியை அறிவிக்க கடவுளால் அனுப்பப்பட்டார். சகரியாவிடம் ஒரு முறையும் மரியாளிடம் ஒரு முறையும் அனுப்பப்பட்டார். சகரியா, கபிரியேல் தூதன் சந்திப்பே நமது தியானப்பகுதி. சகரியா தூபங்காட்டிக் கொண்டிருந்தபொழுது தனிமையில் தூதன் சந்திக்கிறார். தூதனின் காட்சி சகரியாவுக்கு பயத்தை ஏற்படுத்திற்று. பயப்படும் மனிதர்களிடம் தூதர் வழக்கமாகக் கூறும் வார்த்தை, பயப்படாதே என்பதாகும். வயது முதிர்ந்த இவருடைய உள்ளத்தில் இருந்த குறை கடவுளின் முன் மன்றாட்டாகத் தினம்தினம் ஏறெடுக்கப்பட்டு வந்துள்ளது என்பது இங்கு தெளிவாகிறது.
தூதன் சகரியாவுக்கு மகன் பிறப்பான் என்றும் அவர் உயர்வுகள் பண்புகள் அனைத்தையும் அறிவிக்கிறார். முதுமையினிமித்தம் சகரியா மனது குழம்புகிறது. கடவுள் சொல்லி அனுப்பிய செய்தியைக் குறித்து சந்தேகப்படுகிறார். பேச்சை இழந்தார். ஆனால் தூதர் சொன்னபடியே எல்லாம் நடந்தது.
அன்பானவர்களே கடவுள் இன்றும் நம்மை தூதரைக் கொண்டு காப்பாற்றுகிறார். தூதர்கள் இன்றும் நம்மோடு பாதுகாவலராக இருக்கிறார்கள் என்பதை மறவாதிருப்போம். இறைவார்த்தைகள் நம் கைகளில் இருக்கின்றன. அதை வாசிக்கும் போதெல்லாம் கேட்டு படிக்கும்போதெல்லாம் கடவுள் நம்மோடு பேசுகிறார். இறை வார்த்தையை நம்புவோம். துணிவோடு வாழுவோம்.
விண்ணையும் மண்ணையும் படைத்தவரே, உம் வார்த்தையால் அனுதினம் எங்களோடு பேசும். உம் வார்த்தைகளை சந்தேகமின்றி நம்பி வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
