மத்தேயு 27 : 20-24                             29 மார்ச், 2020-ஞாயிறு

“பரபாஸை விடுதலை செய்யக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்விக்கவும், பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களைத் தூண்டிவிட்டார்கள்.” – மத்தேயு 27 : 20

போதிய அறிவும், பணமும் வேலையும் இல்லாத அப்பாவி மக்களை நினைத்துப் பாருங்கள். பணமே பிரதானம் என எண்ணி தீமைகளுக்கு ஆதரவு கொடுக்கும் மக்களை என்ணிப் பாருங்கள். இப்படிப்பட்டவர்கள் தான் அன்று பிலாத்து இயேசுவுக்கு எதிரான தீர்ப்பு எழுதிட உதவினார்கள்.

இயேசு கிறிஸ்துவை விடுதலை பண்ண பிலாத்து முயன்றது உண்மைதான். பஸ்கா பண்டிகையை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் கைதியாக இயேசுவை பிலாத்து முன் நிறுத்தினார். ஆனால் மக்கள் பரபாஸிற்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். அவர்கள் அப்படிப் பேச மதத்தலைவர்களும் மூப்பர்களும் தூண்டிவிட்டார்கள். இப்படிப்பட்ட தவறான, சுயநலமான தூண்டுதல் இன்றைக்கும் நிழ்கிறது. இப்படிப்பட்ட தவறான தூண்தலுக்கு ஆதரவாக பலர் இன்றும் செயல்படுகிறார்கள். இது ஆண்டவருக்கு ஏற்புடையதல்ல. தூண்டிவிடுதல் பெரும் பாவமே. பிறரைத் தவறான வழியில் தூண்டிவிட்டு பிரச்சனைகளை உருவாக்குகிறவர்கள் இந்தத் தவக்காலத்தில் நேராக சிலுவையின் பக்கத்தில் செல்வோம்.

ஏனெனில் சிலுவையில் தொங்கும் இயேசுகிறிஸ்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவர்களுக்காகவே வந்தார். பாடுகளை ஏற்றார். அந்த மக்களை வெறும் பணத்திற்காகத் தூண்டிவிடும் இழி குணம் படைத்த மக்கள் மனம் மாறிட உபவாசம் இருப்போம். தூண்டிவிடும் மக்கள் சிலுவையை நோக்கி வர வழி நடத்துவோம்.

மனசாட்சிக்கு எதிராக வாழ்பவர்கள், பிறரைத் தூண்டிவிட்டு லாபம் அடைய நினைப்பவர்கள் அனைவரும் சிலுவைக்கு முன்வந்து நிற்பார்களாக! மக்களை சுய நலத்திற்காக பயன்படுத்தும் நாம் அனைவரும் இயேசுவிடம் திரும்புவோம். சிலுவை நம்மை இயேசுவை நோக்கிப் பார்க்கத் தூண்டுவதாக!

பாவங்களைப் பகைக்கிற எங்கள் அன்பு கடவுளே! பிறரை தீய காரியங்களுக்காக தூண்டிவிட்ட எங்கள் பாவச் செயல்களை மன்னியும். உம்மை நோக்கி நாங்கள் திரும்ப தூண்டப்பட உதவியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.