எரேமியா 11 : 22-24 30 ஆகஸ்ட், 2021 திங்கள்
“கிறிஸ்துவினிமித்தம் எனக்கு நேரிடும் பலவீனங்களிலும் நான் பிரியமாயிருக்கிறேன்.” – 2 கொரிந்தியர் 12 : 10
இன்பத்தில் இன்புறுவது இயற்கை தான். ஆனால் இன்றைய தியான வசனச் சூழலில் ஆனந்தமாயிருப்பது இயலுமா? பலவீனம், அவமானம், நெருக்கம், துன்பம், இடுக்கண் இவை நமக்கு நிகழும் போது அதை நம்மால் பிரியமுடன் ஏற்க முடியுமா? யாருமே இல்லாத ஒரு தீவில் ஒருவன் சிக்கிக் கொண்டான். குடிசை ஒன்றை அமைத்தான். உடைமைகளை அதற்குள் வைத்தான். கிடைத்ததைக் கொண்டு காலம் கழித்தான். ஒரு நாள் குடிசை தீப்பற்றிக்கொண்டது. உயிர் மட்டுமே மிச்சம். கதி கலங்கினான். விடுதலைக்கு வழியில்லையென வருந்தினான். கடலில் மரக்கலம் ஒன்று வந்தது. அதிலிருந்து மனிதன் ஒருவன் வந்தான். ‘நீங்கள் நெருப்பு வளர்த்தீர்கள். அது உங்களது ஆபத்தை எனக்கு உணர்த்தியது. வாருங்கள்! உங்களை அழைத்துச் செல்லுகின்றேன்’ என்றான். துன்பம் இன்பமாக மாறியது.
பவுல் பாடுகளை வரவேற்பது ஏன்? கிறிஸ்துவின் நிமித்தம் என்றார். தனது பலவீனத்தில் இறைபலம் கிடைக்கும். கடவுளின் கிருபை அபரிமிதமாகப் பெருகும். பவுலின் இந்த எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் இன்றைய இறை வார்த்தை! நீங்கள் நெருக்கடியில் இருக்கின்றீர்களா? அவமானத்தால் தலை குனிந்திருக்கின்றீர்களா? முள் இல்லாமல் கிரீடம் இல்லை, துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை, வியர்வை இல்லாமல் உயர்வு இல்லை. விடுங்கள் கவலையை! சிலுவை நாதர் இயேசு விடுதலை வழங்குவார் உங்களுக்கு! அவரது அருள் பார்வை உங்களை விட்டு அகலாது இன்புற்று வாழ்வீர்கள். உங்கள் துன்பத்திலும் இடுக்கண்களிலும் இன்பமாக வழி காட்டட்டும் கர்த்தர்.
கன்மலையானவரே! உமது கிருபையின் கரத்துக்குள் என்னைக் கையளிக்கிறேன். எந்தச் சூழலிலும் மகிழ்வுடன் வாழ்ந்திட ஏழையை ஆற்றல் படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில், ஆமேன்.