ரோமர் 6 : 1-4                                        30 அக்டோபர், 2021 சனி

“இகழ்வோரை இகழுகிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” – நீதிமொழிகள் 3 : 34

கடவுளின் கிருபை எந்நாளும், எல்லாருக்கும் இலவசமாகவே கிடைக்கக் கூடியது. கடவுள் வழங்கும் கிருபையை எல்லா மனிதரும் ஒன்று போலப் பார்ப்பதில்லை, அணுகுவதில்லை, ஏற்றுப் பயன்படுத்துவதுமில்லை. தேவ கிருபையைப் புறக்கணித்தல்; தேவ கிருபைக்கு எதிர்த்து நிற்றல், தேவ கிருபையை அற்பமாக எண்ணுதல் போன்ற வெவ்வேறு மனப்பான்மையோடு தான் மனிதர் கிருபை என்ற இலவச ஈவை அணுகுகின்றனர். கடவுளின் கிருபையோடுள்ள அணுகுமுறைக்கு ஏற்ப மனிதரின் வாழ்க்கை அனுபவங்களும் வேறுபடுகின்றன.

கடவுள் கிருபையாகவே நம் பாவங்களை மன்னிக்கிறார். நம்முடைய பாவங்களைச் சட்ட ரீதியாகவோ, சாதாரண நியாயத்தின் அடிப்படையிலோ கடவுள் அணுகுவதில்லை. கிறிஸ்துவின் நிமித்தம் பரிவு, கழிவிரக்கம், கிருபை கொண்டவராகத் தான் நம்மை அணுகுகிறார் கடவுள். பாவத்துக்கான நியாயமான பரிகாரத்தைச் செலுத்த நம்மால் எவராலும் முடியாது. இதை அறிந்த கடவுள், இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக, கிருபையாக நம்மை மன்னித்து விடுகின்றார். தேவ கிருபையின் அடிப்படையில் வழங்கப்படும் இம்மாபெரும் மன்னிப்பினைப் பெற்றுக் கொள்ளும் மனிதர் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழாமல் திருந்தி வாழ்தல் அவசியம். புது மனிதனாக, இறைமக்களாக, மன்னிப்புப் பெற்றவர்களாக, கிருபை பெற்றவர்களாக வாழ்வது அவசியம். இலவசமாகக் கிடைத்த கிருபையை, மன்னிப்பின் மாண்பினை உணராமல்; திரும்பத் திரும்ப தவறு செய்து இறைக்கிருபையை அவமானப்படுத்தி ஆபத்தை உருவாக்குகிறோம்.

‘கிருபை பெருகும்படி பாவத்தில் நிலைத்திருப்போம் என்போமா? இல்லவே இல்லை’ என பவுல் திட்டவட்டமாகக் கூறிய வேத வாசிப்புப் பகுதி (ரோமர் 6;1-4) சுட்டிக் காட்டுகிறது. கிருபை இலவசமானது தான்! கிருபையை இகழுதல் மற்றும் அற்பமாக எண்ணுதல் கடவுளையே அவமதிப்பதாகும்.

தேவ கிருபையைப் பொறுத்த வகையில், மனிதருக்கிருக்க வேண்டிய மிகச் சிறந்த ஆயத்தம் தாழ்மை. இறைக்கிருபை தாழ்மையுள்ளவரைச் சூழ்ந்து கொள்கின்றது. அலங்கரிக்கின்றது. இரட்சிக்கிறது. தாழ்ந்திருப்போம். இறைக்கிருபையுடன் வாழ்ந்திருப்போம்.

பிதாவாகிய கடவுளே, தாழ்மையைத் தாரும். உமது கிருபையை முழுமையாய் ஏற்கின்ற மனப் பக்குவம் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.