எபிரேயர் 12 : 7-10 23 செப்டெம்பர், 2021 வியாழன்
“கர்த்தாவே, …என்னைத் தண்டியாதேயும்; … எரிச்சலில் என்னைக் கண்டியாதேயும்.” – சங்கீதம் 38 : 1
ஆப்பிரிக்கா நாட்டில் தேவ ஊழியர் ஒருவர் ஒரு கிராமத்தில் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கொடூர காட்சியைக் கண்டார். ஒரு சிறுவன் மரத்தில் கட்டப்பட்டிருந்தான். தூரமாக நின்ற வேறொரு மனிதன் வில் ஒன்றில் அம்பை வைத்து சிறுவனின் இருதயத்துக்கு நேராகக் குறி பார்த்து கொண்டிருந்தார். இதை கண்ட தேவ ஊழியர் அதைத் தடுத்தார். இவனுடைய கீழ்படியாமையினாலேயே இந்தத் தண்டனையைக் கொடுத்திருக்கிறோம் என்றான் வில் வைத்திருந்தவன். அம்பு சிறுவனுடைய இருதயத்துக்கு நேராக எய்யப்பட்டது. தேவ ஊழியர் அந்த அம்புக்கு நேராகத் தனது கையை நீட்டினார். அம்பு ஊழியரின் கையைத் துளைத்து இரத்தம் தரையில் சிந்தியது. ‘இந்தச் சிறுவனுக்குப் பதிலாக எனது ரத்தத்தைச் சிந்தியிருக்கிறேன் … இவனை விட்டு விடுங்கள்’ என்றார் தேவ ஊழியர்.
தாவீது அரசன் தனது பாவத்தை அறிக்கை செய்கிறார். இதுவே தியானப் பகுதி. இந்தச் சங்கீதம் தனி ஒருவரின் புலம்பல் பாடலாகும். ‘கர்த்தாவே, என்னைத் தண்டியாதேயும், எரிச்சலில் என்னைக் கண்டியாதேயும்’ என்று பாடினார் தாவீது. தாவீது நோயால் துன்புறுகிறவர் போலத் தெரிகிறது. இந்த நோய் அல்லது வேதனை ‘இறையவர் கண்டிப்பு’ என்றும் தாவீது உணர்ந்தார். நமது பாவங்களுக்காக நாம் தண்டிக்கப்படவேண்டியவர்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள். இயேசு ஆண்டவர் நமது பாவத்திற்காகத் தம்மையே சிலுவை மரணத்துக்கு தண்டனைக்கு, இரத்தம் சிந்துதலுக்கு ஒப்புக் கொடுத்தார். இயேசுவால் நாம் மீட்கப்பட்டவர்கள். அவர் நமது பாவங்களை மன்னிக்கிறார். ஆகவே சிட்சையும் கண்டிப்பும் தண்டனையும் நமது பாவத்தைச் சுட்டிக் காட்டப் பயன்படும் என்பதை உணருவோம். கண்டிக்கிற கடவுளின் அன்பைச் சந்தேகிக்காதீர்.
நீதியுள்ள நியாயாதிபதியாக வரப்போகிற இறைவா, தேவையானால் எங்களை சிட்சித்து, கண்டித்து, மனந்திருப்பி, எங்களை மன்னித்து உமது பிள்ளைகளாக மாற்றும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.