சங்கீதம் 104 : 25-30 1 ஏப்ரல், 2019 திங்கள்
“…கடவுளின் ஆவி தண்ணீர் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது.” – ஆதியாகமம் 1 : 2
திருமறையில் சொல்லப்படும் பன்னிரெண்டு சிறிய தீர்க்கர்களில் ஒருவர் ஆபகூக். இவர் கடவுளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். பொல்லாதவன் தன்னை விட நல்லவனை விழுங்கும் போது நீர் மௌனமா யிருக்கிறதென்ன? என்பதே அக்கேள்வி. இவர் மட்டுமல்ல நம்மில் அனைவரும் இப்படியே கேட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுள் செயல்படாத நிலையில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் செயல்படுகிற இறைவன் என்பதை நமது தியானப்பகுதி உறுதிப்படுத்துகிறது. அவர் தண்ணீர் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். மனுக்குலம் படைக்கப்பட்டதற்கு முன்பே கடவுள் இருந்தார். அவர் ஆவி அசைவாடிக் கொண்டிருந்தது. அசைவு உயிரோடிருப்பதற்கும் செயல்படும் தன்மைக்கும் ஆதாரமாக உள்ளது. படைப்பின் வரலாற்றைப் படிக்கும் போது அவர் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அசைவாடிக் கொண்டிருந்தவர் வாய் திறந்து பேசினார். பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் புதிய புதிய படைப்புகளை தந்தன. வெளிச்சம் உண்டாகுக என்றார். உண்டாயிற்று. வானத்துச் சுடர்கள் உண்டாகுக என்றார். உண்டாயிற்று. பறவைகள் உண்டாகுக என்றார். உண்டாயிற்று. ஒழுங்கற்று வெறுமையாயிருந்த பூமிக்கு புது வடிவம் கொடுத்து நாம் இப்போது காண்கிற அனைத்தையும் அவர் தம் வார்த்தையால் படைத்தார். படைப்பின் மகுடமாக மனிதனைப் படைத்தார். அவனுக்கு இணையாக மனுஷியையும் படைத்து உலகை அவர்கள் கையில் ஒப்படைத்தார். ஆண்டுகொள்ளுங்கள் என்றும், பண்படுத்திப் பாதுகாத்து வாருங்கள் என்றும் கட்டளை கொடுத்தார்.
செயலாற்றல் மிக்க இறைவன் நம் கையில் இயற்கையை ஒப்படைத்திருக்கிறார். ஒழுங்கற்ற உலகை ஒழுங்குபடுத்தித் தந்திருக்கிறார். நாம் என்ன செய்கிறோம். இறையவர் நமக்காக உருவாக்கிய இயற்கையை அழித்து உலகை ஒழுங்கற்றதாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு நாமே தீமையை வருவித்துக் கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் பழியைக் கடவுள் மேல் போடுகிறோம். இருப்பினும் செயல்படும் கடவுள் நம்மைக் கொண்டு உலகை இன்னும் சிறப்பாக மாற்ற விரும்புகிறார். அவர் விருப்பப்படி செயலாற்றுவோம்.
படைக்கும் ஆற்றல் பெற்றவரே, படைப்பை அழிக்கும் எங்கள் எண்ணங்களை மாற்றி உலகுக்கு புதுவடிவம் கொடுக்க எங்களை உமது கருவிகளாக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.
