சங்கீதம் 101 : 1-4                                          09 நவம்பர் 2025, ஞாயிறு

“குற்றமற்ற இருதயமுள்ளவனாய் என் வீட்டிலே நடந்து கொள்வேன்.” – சங்கீதம் 101 : 2

பிள்ளைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என அறிவியல் அறிஞர்கள் சொல்லுகிறார்கள். ஏனென்றால் வீட்டில் பிள்ளைகள் இருப்பதுபோல் வெளியில் இருப்பது இல்லை. வீட்டில் நல்ல பிள்ளைகளாய் இருப்பவர்கள் வெளியில் பொல்லாதவர்களாய் நடக்க வாய்ப்பு உள்ளது.

பொன் மொழி ஒன்று உண்டு. “உன் நண்பன் யார் என்று சொல். நீ யாரென்று கூறிவிடுகிறேன்” என்பதாகும்.

ஒழுக்கம் முதலில் வீட்டில் இருந்துதான் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. பழைய போதகர்களின் குடும்பங்களை பார்த்து இருக்கிறோம். போதகர்கள் வீட்டில் குடும்ப ஜெபம் காணப்படும். போதகரம்மா பெண்கள் ஊழியத்தில் முக்கிய பங்கு கொண்டு செயல்படுவார்கள். போதகரின் பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனி மரியாதை இருக்கும். இவை எல்லாம் போதகர் குடும்பம் என்ற நிலையில் கண்டோம்.

போதகர் வீடு சந்திக்கும் போது குடும்ப பிரச்சனைகளை அவரிடம் கூறவும், குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் எப்படி கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர வேண்டும் என கற்று தந்தார்கள். அவர்கள் வாழ்ந்தும் காட்டினார்கள்.

தாவீது ராஜா கடவுளிடம், “கடவுளே சுத்த இருதயத்தை எனக்குத் தாரும்” என்று வேண்டுதல் செய்தார். மனிதனின் இருதயம் மகா கேடுள்ளது என்பதையும் வேதத்தில் நாம் காண்கிறோம்.

நமது குடும்பங்களில் சுத்த இருதயம் உடையவர்களாய், உண்மையை பேசி நியாயத்தை கடைபிடித்து, நீதியை செய்கிறவர்கள் குறைந்து கொண்டு இருக்கிறார்கள்.

பிறர் மனதை துக்கப்படுத்துகிற நிகழ்வுகளை நாம் நினைவுகூருவோம். நாம் வாழும் திருச்சபைகளில் சுத்த இருதயமுடையவர்களாக வாழ வேண்டும். நம்மை பார்க்கிறவர்கள் நமது செயல்களை கண்டு கடவுளை மகிமைப்படுத்த வேண்டும்.

இளைய மகன் மனந்திரும்பி தந்தையிடம் வந்தபோது உம்முடைய வீட்டில் வேலைக்காரனாக இருந்து வாழ்கிறேன் என்றான். அதற்கு பொருள் குற்றமற்ற இருதயமுள்ளவனாக இருப்பேன் என்பதாகும்.

தாலந்து பெற்றவர்களில் 10, 5 பெற்றவர்கள் எஜமானுக்கு குற்றமற்ற இருதயமுடையவர்களாய் காணப்பட்டு அதனை 10 மடங்காக, 5 மடங்காக சம்பாதித்து எஜமானிடம் நற்பெயரை பெற்றார்கள். 1 தாலந்தை வாங்கியவன் நிலத்தில் புதைத்ததால் எஜமானனின் கோபத்திற்கு ஆளாகி விடுகிறான்.

கடவுளிடம் குற்றமற்ற இருதயமுடையவர்களாய் வருவோம். ஆசீர்வாதத்தை பெறுவோம்.

அன்புள்ள கடவுளே! உமது நாமத்தினால் மீட்கப்பட்ட மக்களாகிய நாங்கள் உமக்கு முன் குற்றமற்ற இருதயமுள்ளவர்களாய் வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.