1 இராஜாக்கள் 15 : 12-15                                                        26 ஜுன், 2018 செவ்வாய்

“நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் செய்கைகளையும் குறைவறச் சீர்ப்படுத்தி…” – எரேமியா 7 : 5

எரேமியாவின் ஏழாம் அதிகாரம், எரேமியாவின் `ஆலயப்பிரசங்கம்’ எனப்படுகிறது. யூதர்களில் பலர் தேவாலயத்தை தங்கள் பாவங்களை மறைக்கும் முகமூடியாக்கிக் கொண்டனர். இஸ்ரவேலருக்கு சமய வாழ்வில் இருந்த ஈடுபாடு சமூக வாழ்வில் இல்லாமல் போயிற்று. வறியவன் என்றும், எளியவன் என்றும் இல்லாதவன் என்றும், இருப்பவன் என்றும் ஏற்றதாழ்வு மலிந்து கிடந்தது. ஆதரவற்றவர்கள் கவனிக்கப்படவில்லை. சமூகக் கேடுகளுக்கும் `கடவுளின் ஜனமாகிய’ பரிசுத்த மக்களுக்கும், சம்பந்தம் இல்லை என நினைத்தனர்.

இன்றும் இதே நிலை தொடருகிறது. சமய வாழ்வும், சமூக வாழ்வும் இரண்டறக் கலந்ததே! ஆனால், இரண்டும் கலந்ததே இறைவன் விரும்பும் வாழ்வு என்பதை நாமும் மறந்துவிட்டோம்.

கிறிஸ்தவன், திருச்சபை, இரட்சிக்கப்பட்டவன் எனும் பரிசுத்தப்போர்வைக்குள் முடங்கிக் கொள்ளப் பார்க்கிறோம். சமூகச் சீர்கேடுகளைச் செய்ய அங்கீகாரமாக, சமய வாழ்வு சிலருக்குப் பக்திப் போர்வையாய் மாறிவிடுகிறது.

நமது வழிகளையும் செயல்களையும் முதலாவது சீர்படுத்துவோம். பிறருக்கு நலமானதை, நன்மையானவைகளை நியாயமாய் அவர்களுக்குரியதை அவர்கள் பெற வழிகாணுவோம். சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் குரல் கொடுக்கிறோமா? எளியோருக்கு அநீதி இழைக்கும்போது, அவர்களுக்காக நாம் போராடுகிறோமா? இவ்வாறு அநீதியை எதிர்த்து குரல்கொடுப்பதும் ஆலயத்திருப்பணிக்குச் சமமானதே. சமூகம் நம் வாழ்வின் பின்னணி! நம் வழிகளைச் சீர்படுத்தி, மக்களின் நல்வாழ்வுக்கு நாம் பின்பலமாக இருப்பதைக் கடவுள் விரும்புகிறார். செம்மையான சமூக நலத்திற்குக் கடவுள் தமது கிருபையைத் தருகிறார். இன்று நாம் செய்யப்போகும் சமூக நலம் என்ன?

பரிசுத்தமுள்ள கடவுளே! என்னை உமது வார்த்தைக்கு இசையச் சீர்படுத்தும். பாதிக்கப்பட்டவரைப் பரிவுடன் கவனித்து என்னாலான உதவியைச் செய்ய என்னைப் பயன்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.