கலாத்தியர் 1 : 6-9                                31 அக்டோபர் 2022, திங்கள்

“சிலர் உங்களை கலங்கச் செய்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் புரட்ட விரும்புகிறவர்களேயன்றி வேறல்ல.” – கலாத்தியர் 1 : 7

அக்டோபர் 31 என்றவுடன் நம் நினைவில் வருவது திருச்சபை சீர்த்திருத்தல் நன்நாளே. அக்டோபர் 31, 1517-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலே வித்தன்பர்க் தேவாலயத்தின் கதவிலே நள்ளிரவில் 95 நியமங்களை அடித்து பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் அறிவர் மார்டின் லுத்தர். அவர் போதகராக பர்த்த சம்பவங்கள் அவரை மிகவும் பாதித்தது. வேதாகமத்திற்கு புறம்பானதாகவும், தவறானதாகவும் இருந்த காரியங்களை எழுத்து வடிவில் சுட்டி காட்டினார். மக்களை தவறான போதனையிலிருந்து விழிப்படைய செய்தார். அன்றைய திருச்சபையிலே, கடவுளின் வசனம் போதிக்கப்படவில்லை. மாறாக சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. பாதிரியார்கள் தவறான போதனைகளை மக்களிடம் பரப்பி அதை பின்பற்றும்படி கட்டாயப்படுத்தினர். குறிப்பாக சடங்காச்சாரங்கள், தங்களை வருத்தி கொள்வது, புனித பயணம், சிலை வழிபாடு, குறிப்பாக பணம் கொடுத்தால் பாவம் மன்னிக்கப்படும் என்று, பாவமன்னிப்பு சீட்டு விற்றனர். இவைகளை முக்கியப்படுத்தி கடவுளின் வசனத்தை மறைத்தனர். இதை எதிர்த்த மார்டின் லுத்தர் கடவுளின் வசனத்தை முக்கியப்படுத்தி திருச்சபையை திருவசனத்தின் பாதையில் நடத்தினார். வசனம் மட்டுமே நம்மை நீதிமான்களாக மாற்றும் என்பதை உயர்த்தி பிடித்தார்.

இன்றைய தியானப் பகுதியில் பவுல் கலாத்திய திருச்சபையாரை மிகவும் கடினமாக பேசுவதை பார்க்கிறோம். பவுல் இந்த பகுதியில் ஊழியத்தை செய்த போது அவர்களை ஆண்டவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைக்க தூண்டுகிறார், அவர்களும் உயிர்த்தெழுந்த ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றனர். இவர்களின் நம்பிக்கையின் விசுவாசத்தை திசை திருப்பும் யூத தலைவர்கள், அவர்களை முதலாவது நியாயப் பிரமாணத்தில் உள்ளவைகளை கடைபிடிக்குமாறு கட்டாயப்படுத்தினார். அதனால் அநேகர், பவுலின் போதனையிலிருந்து பின்வாங்கினர். அதனால் தான் மிகவும் கடினமாக எச்சரிக்கிறார். ஆண்டவராகிய இயேசுவே மனுகுலத்தின் பாவத்திற்காக, மனிதனாக பிறந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்தெழுந்து மனித குலத்தின் நிந்தையை மாற்றினவர். அவரில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் நித்திய வாழ்வை தர வல்லவர்.

இன்றைக்கும் நாம், சடங்காச்சாரங்களிலும், புனிதப் பயணத்திலும், சிலை வழிபாடுகளிலும், மனிதனுடைய தவறான போதனைகளிலும் அடிமைபட்டிருக்கிறோம். நாம் இன்றே உணர்வடைவோம், வேதாகமம் நமது கரங்களிலே கொடுக்கப்பட்டுள்ளது. திருவசனத்தைப் படித்து சீர்திருந்துவோம். ஆண்டவரின் திருவசனத்திலே நிலைத்து வாழ்வோம், நித்திய வாழ்வை சுதந்தரிப்போம்.

மனிதனுடைய சீர்கேட்டை சீர்படுத்த வந்த நல்ல ஆண்டவரே! எங்கள் வாழ்வில் உள்ள அனைத்து சீர்கேட்டையும் நீக்கி நீதியின் பாதையிலே நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.