யோவான் 19 : 17-22 23 மார்ச், 2020-திங்கள்
“(அப்பொழுது) அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்….” – யோவான் 19 : 18
உலகில் ஒரு பொருள் பலரைப் பார்க்க வைக்கவும் சிந்திக்கவைக்கவும் தொழ வைக்கவும் செய்கிறதென்றால் அது சிலுவை மட்டுமே. பெண்களின் தாலியிலும் ஆண்களின் செயின்களிலும் ஆலயத்தின் கோபுரங்களிலும் ஆலயப் பீடங்களிலும் இச்சிலுவை ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. இதற்கு மூல காரணம் இயேசு கிறிஸ்து. அவரே இதனைச் சுமந்தார். இதில் மரித்தார். இதன் வழியே சிலுவையை இந்த உலகம் தவிர்க்கமுடியாத அன்பின் அடையாளமாக்கினார். இப்போது உன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றி வா என இயேசு நம்மை அழைத்துக் கொண்டிருக்கிறார்.
எருசலேமில் இருந்து கல்வாரி மலை வரை இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு வந்தார். பின்னர் இயேசுவை சிலுவை சுமந்து கொண்டு நின்றது. இந்தச் சிலுவையில் தொங்கிக் கொண்டும் இயேசு பிறருக்காக ஜெபித்தார். ஒரு திருடனுக்கு பரதீஸைக் கொடுத்தார். தன் தாயாருக்கு பாதுகாப்பை வழங்கினார். தன் பகைவர்களை எல்லாம் மன்னித்தார். இப்படி உயரிய, தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்கியது சிலுவையில் தொங்கிய இயேசுவே.
இதனால்தான் சிலுவையை நான் விடேன் என்று ஒரு பக்தனும் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில் என் பாவ பாரம் நீங்கிப் போயின என மற்றொரு பக்தனும் சிலுவையைப் பாடினார்கள். விந்தை கிறிஸ்து ஏசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை என்று பாடினான் இன்னொரு பக்தன். சிலுவை உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? உங்கள் வாழ்வில் சிலுவையின் பங்கு என்ன?
இயேசு கிறிஸ்துவின் அன்பு, தியாகம் மன்னிப்பு, இரட்சிப்பு, பரதீஸ் என அத்தனையையும் உள்ளடக்கிய சிலுவை நமக்கு ஏற்புடையதாக இருக்கிறது. நமது வாழ்வின் பாரங்களை சுமக்க சிலுவை ஏதுவாக இருக்கட்டும். சிலுவையின்றி பாவமன்னிப்பில்லை. சிலுவையின்றி நித்திய வாழ்வு இல்லை. சிலுவைச் சிந்தையோடு வாழ்ந்து பாவமன்னிப்பையும், பாவ மன்னிப்பினால் வரும் நித்திய வாழ்வையும் ஆண்டவருக்குள்ளாகப் பெற்று வாழுவோம்.
பாரம் போக்கும் கடவுளே! உமது நேசகுமாரன் சுமந்த உமது சிலுவைக்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்வில் வருகின்ற சிலுவைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் சுமக்கவும் பெலன்தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
