கலாத்தியர் 3 : 24-29 22 நவம்பர் 2025, சனி
“நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போலப் பேசினேன். குழந்தைப் போலச் சிந்தித்தேன்.” – 1 கொரிந்தியர் 13 : 11
குழந்தைகளின் குணநலன்களை பார்த்து இருக்கிறோம். குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள், உண்மையுள்ளவர்கள், முகம்பார்த்து தீர்ப்பு சொல்லாதவர்கள், சண்டையிடாதவர்கள், சண்டைப்போட்டாலும் ஒரு நிமிடத்தில் உறவு கொள்பவர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.
பெரியவர்கள் குழந்தைகளுக்கு எதிரான குணம் கொண்டவர்கள், வைராக்கியம் கொண்டு பிறரோடு உறவை முறித்து கொள்பவர்கள், உண்மை இல்லாதவர்கள், பிறருக்கு தீங்கு செய்பவர்கள், பெருமை உடையவர்கள், சூழ்ச்சி செய்பவர்கள் இப்படி விரிவாக காணலாம்.
பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதும் கடிதத்தில் அன்பினை முன்நிறுத்துகிறார். அன்பு கொண்டவர்கள் எப்படி வாழ்வார்கள். சாந்த குணம் உடையவர்களாக, பொறாமை இல்லாதவர்களாக, கோபம் கொள்ளாதவர்களாக, பொறுமை உடையவர்களாக என கூறிக்கொண்டு செல்கிறார். இவை அனைத்தும் குழந்தைகளின் குணங்களாகும்.
அன்பு இல்லையெனில் கடவுளோடு நாம் வாழ்கிறோம் அவரின் வரங்களை பெற்று இருக்கிறோம் என்று சொன்னாலும் அதனால் எந்தவித பயனும் இல்லை.
சீஷர்கள் ஒருமுறை தங்களில் யார் உயர்ந்தவர்கள் என்ற வாக்குவாதம் செய்தார்கள். இயேசு சிறுபிள்ளைகளை போல் மாறுங்கள் என்று புத்தி சொன்னதை பார்க்கிறோம். குழந்தைகளை போல் மாறாவிட்டால் பரலோக ராஜ்யம் உங்களுக்கு சொந்தம் இல்லை என்றார்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்” என வாள்ளுவர் கூறுகிறார். அன்பை அடைத்து வைக்க முடியாது. கடவுள் நம்மீது வைத்துள்ள அன்பினால் தன் சொந்த குமாரனாகிய இயேசுவை, இவ்வுலகத்திற்கு தந்து அன்பினை வெளிப்படுத்தினார்.
இயேசுவானவர் நாம் இரட்சிக்கபட வேண்டும், மீட்பை பெறவேண்டும், பிதாவோடு மீண்டும் உறவு கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சிலுவையின் பாடுகளின் வழியே இவ்வுலக மக்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தினார்.
நமது அன்பு குடும்பங்களில் காணப்படும், பிறரிடமும் காண்பிக்கப்பட வேண்டும். எளியோரிடம் காண்பிக்க வேண்டும், அன்புக்காக ஏங்குவோருக்கு அன்பை கொடுத்து இயேசுவின் பிள்ளைகளாய் வாழ்வோம்.
அன்புள்ள கடவுளே! நாங்கள் குழந்தையை போல் வாழ அழைக்கப்படுகிறோம். எங்கள் சிந்தை செயல், வாழ்வு கபடமில்லாமல் குழந்தைகளை போல் காணப்பட அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.
