தரிசனம் 12 : 10-11 26 செப்டெம்பர், 2021 ஞாயிறு
“ஜெயம் கொள்ளுகிறவனும் என்னோடு என் சிங்காசனத்தில் உட்காரும்படி அருள் செய்வேன்.” – தரிசனம் 3 : 21
யோவான் இயேசு கிறிஸ்துவின் அன்பான சீடர்களில் ஒருவர். சிறைப்பிடிக்கப்பட்டு பத்மு தீவில் இருந்தார். இறைவன் இயேசு பரலோக தரிசனங்களை யோவானுக்கு வெளிப்படுத்தினார். பரலோக தரிசனங்கள் அடங்கிய புத்தகமே ‘தரிசனம்’ (வெளிப்படுத்தின விசேஷம்). சின்ன ஆசியா எனப்பட்ட நிலப்பரப்பில் இருந்த ஏழு சபைகளுக்கும் தான் கண்ட தரிசனங்களை எழுதினார் யோவான். அவர் எழுதிய கடைசி கடிதம் இது. லவோதிக்கேயா என்னும் சபைக்கு எழுதப்பட்டது. இறைவன் நம் ஒவ்வொருவருடனும் நல்லுறவு வைக்க விரும்புகிறார். தனி நபரின் இதயக் கதவைத் தட்டுகிறார். சபையின் வழியே உலகத்தின் கதவைத் தட்டுகிறார். நமது இதயக் கதவைத் தட்டுகிற கடவுளின் நோக்கம் விருந்தாளியாக சில நாள் தங்குவது அல்ல. அவர் நிரந்தரமாக நமது இதயத்தில் குடியிருக்க விரும்புகிறார்.
நித்தியத்தில் மனிதர் பெற வேண்டிய நன்மைகளை மனிதருக்கு, விசுவாசிகளுக்கு விளக்கிட இயேசு விரும்புகிறார். அவருடைய சிங்காசனத்தில் நம்மை உட்கார வைக்கும் அளவுக்கு, நம்மோடு இயேசு நட்புறவு கொள்ள விரும்புகிறார். எனவே தான், ஜெயம் கொள்கிறவன் என்னோடு உட்காருவான் என்றார். நமது வாழ்வில் கல்வி, பதவி, பணம், அழகு, ஆடம்பரம், படோடோபம், சரீர வலிமை, ஆள்பலம், சபைப் பெருமை, சபைக் கோட்பாடுகள் பண்டிகைகள், செல்வத் திரட்சிகள் பலவற்றை ஜெயம் என்று நினைத்துப் பெருமிதம் கொள்ளுகின்றோம். இவை நமது சொற்ப கால ஜெயத்தின் ஆதாரங்கள். அழிந்து போகின்றவை. இவை அழியும் போது நமது வெற்றிகளும் வெளுத்துப் போகிறது. இயேசு நம் ஆண்டவர் – மரணத்தை ஜெயித்தவர். நமது பலவீனங்களில் நமக்குப் பெலனாயிருக்கிறார். நமது அரணும் கோட்டையுமாயிருக்கிறார். ‘நாம் ஜெயம் பெற்றவர்கள், அவரோடு சிங்காசனத்தில் அமரப் போகிறவர்கள்’ இதை இறைவன் இயேசு நமக்கு இன்றைக்கும் நினைவூட்டுகிறார்.
உங்களிடம் பணம் இல்லாமலிருக்கலாம், நோய் இருக்கலாம், நீங்கள் தனிமையில் இருக்கலாம். பல நெருக்கடிகள் இருக்கலாம். இவையெல்லாம் வாழ்க்கையை ஜெயம் கொள்ள, இறைச்சிங்காசனம் நோக்கிச் சென்றிட வழியாகவும் இருக்கின்றன. இறையருள் காட்டும் வழி நடப்போம்.
தோல்விகளை ஜெயமாக மாற்றுகிறவரே! நாங்கள் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.