1 பேதுரு 3 : 16-21 15 அக்டோபர், 2021 வெள்ளி
“கீழ்ப்படியாமையின் பிள்ளைகளில்…. கிரியை செய்கிற ஆகாயத்து அதிகார பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியும்
நடந்து கொண்டீர்கள்.” – எபேசியர் 2 : 2
கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் துன்மார்க்கத்திலேயே தொடர்ந்து வாழும் எந்த மனிதனும், கொடிய விளைவுகளிலிருந்து தப்பவே முடியாது. கீழ்ப்படியாதவர்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போன சம்பவங்கள் ஏராளம். இவற்றைக் கண்ட பின்னரும், மனிதர் கடவுளுக்குக் கீழ்ப்படியாது வாழ்வது ஏன்?
கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தீய சக்தி ஒன்றினை அடையாளம் காட்டுகிறார் தியான வரியை எழுதிய எபிரேயர் நிருப ஆசிரியர். கீழ்ப்படியாமையின் பின்னணியில், சாத்தான் கிரியை செய்கிறான் என்ற விளக்கம் பெறுகிறோம். மனிதரைக் குறித்த கரிசனையோடு அவர்களைச் சூழ்ந்து ‘அடைகாப்பவர் போல்’ காத்து நடத்துபவர் கடவுள். படைப்பின் மகுடமாக விளங்கும் மனிதன் மீதிருக்கும் கடவுளின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் அழிக்க முனைவது சாத்தானின் கிரியை. மனிதரையும் மனிதருக்காகவே படைக்கப்பட்ட யாவையும் கடவுளிலிருந்து பிரித்து நித்திய அழிவுக்கு நேராக இழுத்துக் செல்ல செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் சாத்தான். மனிதர் முன் வசீகரமாகத் தோன்றி, நயமாகப் பேசி வஞ்சிக்கும் திறன் கொண்ட சாத்தானின் வலையில் சிக்காதபடி ஜாக்ரதையாய் வாழ்தல் தேவை. சாத்தானின் செயல்களுக்கு இடங்கொடாமல் வாழ்ந்திட விழிப்புடன் முனைவோம்.
பெருவெள்ள அழிவுக்குத் தப்பிய 8 பேர் நோவாவின் பேழைக்குள் இருந்தனர். இது போன்று ஞானஸ்நானம் பெற்ற நாம் இருக்கின்றோம் என பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா மற்றும் பித்தினியா பிரசேங்களில் சிதறி வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு தூய பேதுரு சுட்டிக் காட்டினார். நமக்கும் கடவுளின் வார்த்தை பிரசங்கிக்கப்படுகிறது உண்மை தான். இருப்பினும் மனுஷர் நித்திரை பண்ணுகையில் சத்துரு வந்து கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போயிருப்பதால், கடவுளின் சித்தத்தைத் தெளிவாகக் கண்டறிந்து அதற்குக் கீழ்ப்படிந்து வாழ்தல் அவசியம். சாத்தானின் தீய சக்திக்கு, செயலுக்கு, விதைப்பிற்கு இடந்தராமல் வாழ்ந்திட கடவுள் நம்மைத் தடுத்து ஆட்கொள்ளட்டும்.
ஆண்டவரே, உம்முடைய விருப்பம் அறிந்திடவும், அதற்கு மட்டும் கீழ்ப்படிந்து வாழ்ந்திடவும் அருள் தாரும். சாத்தானின் கிரியைகளுக்கு மறுத்து வாழும் அறிவையும் உணர்வையும் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.