தானியேல் 11 : 25-26                      1 ஆகஸ்ட், 2021 ஞாயிறு

“தைரியமாயிரு, என்னைப் பற்றியவைகளை …. ரோமாவிலும் சாட்சி சொல்ல வேண்டும்.” – அப்போஸ்தலர் 23 : 11

இன்று மாதத்தின் முதல் நாள்! வாரத்தின் துவக்க நாள்! தைரியமாயிருங்கள்! இன்று இறைவன் நமக்குத் தரும் செய்தி; தைரியமாயிருங்கள்! புதிய நாள். புதிய எதிர்பார்ப்பு!@புதிய காரியங்கள்! உங்கள் வாழ்க்கையில் இறைவன் உங்களுக்குத் தந்தருள்வாராக! இரட்சகர் இயேசுவைக் குறித்துத் தைரியமாக சான்று பகர்வோம் என்பது இன்றைய சிறப்புக் கருத்தாகும்.

வாசிப்புப் பகுதியில் கிரேக்க மன்னன் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் பெயர் அந்தியோசியஸ் எபிபானஸ். யூதர்களுக்கு எதிரான இவனது எழுச்சியும் வீழ்ச்சியும் எழுதப்பட்டுள்ளது. இறையரசுக்கும் இவ்வுலக அரசுகளுக்கும் இடையில் போராட்டங்கள் உண்டு. இறையரசு எப்பொழுதுமே எதிர்ப்புகளை எதிர்நோக்கியுள்ளது. இன்றைய தியானப் பகுதியில் இறைத் தரிசனம் பற்றிய குறிப்பு உள்ளது. புனிதர் பவுல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது தான், இறைவன் தமது தரிசனத்தால் பவுலைத் தைரியப்படுத்தினார். பவுல் எதிர்நோக்கியுள்ள பாடுகள் பயனுள்ளவைகளாக மாறும். அன்று அறியப்பட்ட உலகமாகிய ரோமிலும் கிறிஸ்துவுக்குச் சாட்சியிட வேண்டுமென இறைவன் தைரியப்படுத்தினார்.

மரபுக்கதை ஒன்று… இரட்சகர் இயேசு விண்ணுக்குச் சென்றார். வான் தூதர்கள் வரவேற்றனர். அப்பொழுது தேவ தூதன் ஒருவன், ‘இயேசுவே! நீர் விட்டு வந்துள்ள இரட்சிப்பின் செய்தியை இனிச் சொல்வது யார்?’ எனக் கேட்டான். அப்பொழுது இயேசு, ‘பேதுரு இருக்கின்றார்; யோவான் இருக்கின்றார்; யாக்கோபு இருக்கின்றார். என் சீடர்கள் என் இரட்சிப்பின் செய்தியைத் தைரியமாகச் சொல்வார்கள்” எனப் பதிலளித்தார்…

இயேசு தம் சீடர்களை முழுமையாக நம்பினார். உண்மைதான்!

நாமும் இயேசுவின் சீடர்கள்தான். நம்மையும் இயேசு நம்புகின்றார். ‘இயேசுவே இரட்சகர்; இவர் பாவத்திலிருந்து நம்மை மன்னிக்கின்றார்’ என்ற செய்தியை நாம் நம்மைச் சுற்றியிருக்கிற அனைவரிடமும் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார். நற்செய்தியைச் சொல்வோம்! இயேசுவைச் சாட்சியிடுவோம் – தைரியமாக!

ஆற்றலுள்ள பேரரசரே! நான் பெற்ற இரட்சிப்பின் இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும். உமது இரட்சிப்புக்குச் சான்று பகர தைரியத்தை எமக்குத் தந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் – ஆமேன்.