யோவான் 20 : 24-25           10 ஏப்ரல் 2021, சனி 

“அவிசுவாசமுள்ளவனாயிராமல் விசுவாசமுள்ளவனாயிரு.” – யோவான் 20 : 27

இம்மியளவும் சந்தேகம் இல்லாத நம்பிக்கைதான் சம்பூரண நம்பிக்கை.  நன்நம்பிக்கை என்பது இதுதான்.  இயேசு உயிர்த்தார் என்ற சத்தியத்தைச் சம்பூரணமாய் நம்புகிறீர்களா?  தனது தாய் தனக்குச் சொன்னால்தான், தனது தந்தை யார் என்பது எவருக்கும் தெரிய வரும்.  தாய் சொல்லை நம்புகிறோம்.  ஆண்டவர் சொல்வதை நம்பாமல் இருக்கலாமா?  தியானவரியை உயிர்த்தெழுந்த ஆண்டவர் திதிமு என்ற தோமாவிடம் சொன்னார்.  அவிசுவாசியாகவும், சந்தேகப் பிராணியுமாயிருந்த தோமா தான் பிற்காலத்தில் தீவிர விசுவாசியாக இந்தியாவிற்கு வந்து, சுவிசேஷத்தை முதல் முதல் அறிவித்த இயேசுவின் நேரடிச் சீடர்.  நாமும் தோமாவைப் போல அவிசுவாசியாக பலவீன விசுவாசியாக இருக்கலாம்.  இயேசுவின் வார்த்தைகள் நம்மை சம்பூரண விசுவாசி ஆக்கி விடுகிற வல்லமையுள்ளதாகும்.

எத்தனையோ காரியங்களை கொஞ்சம் விசுவாசிக்கிறோம்.  அதிகம் ‘அவிசுவாசிக்கிறோம்!’  கிறிஸ்து இயேசுவின் பாடுகளும் மரணமும் நம்மை இரட்சிக்கிறது என்று நமக்குத் தெரியும்.  சம்பூரணமாக இதை விசுவாசிக்கிறோமா?  இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  ஏன் தெரியுமா?  இன்னொரு கிறிஸ்தவர் ‘நீ மறுபடியும் பிறந்தவனா?’ என்று கேட்டால் ‘ஆம்!’ என்று சொல்ல முடியவில்லையே பலரால்.  இந்த நிலை அவிசுவாசம்தானே?  கிறிஸ்து எனது மீட்பர் என்று விசுவாசிக்கிறேன்.  ஆனால் நான் குழந்தையாக இருந்த போது திருமுழுக்கு பெற்றவன்.  இந்தச் சூழலில் நீ முழுகித்தான் ஸ்நானம் பெற வேண்டும் என்று ஒருவர் சொன்னால், நமது விசுவாசம் ஆட்டம் காணுகிறதா?

இது போன்ற சூழ்நிலையில் வாழுகிற நமக்கும் ‘அவிசுவாசம் உள்ளவனாயிராமல் விசுவாசம் உள்ளவனாயிரு’ என்று இயேசு சொல்கிறார்.  நீங்கள் விசுவாசிக்கிறபடியே உங்களுக்கு ஆகும்!  நீங்கள் விசுவாசத்தில் பூரணப்பட ஆவியானவர் துணையிருப்பாராக.

குறையாத ஆற்றல் தருகிற வல்லவரே! கிறிஸ்துவை விசுவாசிப்பதில் தளராதிருக்க அருள் பாலிப்பீராக.  இயேசு வழியே ஆமேன்.