ஓசேயா 7 : 1-3                                  03 செப்டெம்பர், 2021 வெள்ளி

“ராஜாவை தங்கள் தீமையினாலும் அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.” – ஓசேயா 7 : 3

கி.மு. ஏழாம் நூற்றாண்டு ஏசாயா தீர்க்கதரிசியின் காலம். யூதா, இஸ்ரவேல் நாடுகள் செழிப்பாக விளங்கியது. ஆனால் மக்களில் ஆன்மீக வறட்சி இருந்தது. சமுதாய வாழ்வில் ஏராளமான சீர்கேடுகள் காணப்பட்டன. மக்களிடம் இறை பயம் இல்லை. கர்த்தரை அறிகிற அறிவும் இல்லை. சிலை வணக்கமும், அத்துடன் சேர்ந்த துன்மார்க்கமான வாழ்க்கையும் சமுதாயத்தில் மலிந்து காணப்பட்டன. நாட்டை ஆண்ட பிரபுக்கள், அரசர்கள், மற்றும் மக்களை ஆன்மீகப் பாதையில் வழி நடத்திய ஆசாரியர்கள் தங்கள் கடமைகளில் தவறி விட்டனர். மக்கள் தங்கள் மனம் போல வாழ ஆரம்பித்தனர். பாவத்தைத் தண்ணீரைப் போலப் பருக ஆரம்பித்தனர்.

தன்னை விட்டுத் தூரம் போனவர்கள் தம்மிடம் மீண்டும் வர இறைவன் தீர்க்கர் வழியே அழைப்பு விடுத்தார். உங்களுக்குப் புது வாழ்வு இருக்கிறது என்றார். இதுவே தியானப்பகுதி. தன்னிடம் தீமையும் பொய்யும் இல்லை என்பதைக் கடவுள் விளக்கினார். ஏசாயா தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தைப் போன்ற ஒரு கால கட்டத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பாவத்தைப் பற்றிய அச்சம் இல்லாமல் துணிகரமாகப் பெரும் பாவங்களைச் செய்கிறோம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று எச்சரித்திருப்பதையும் நாம் அறிவோம். ஆனாலும் நமக்கு உணர்வு இல்லை. இன்று இத்தியானம் நாம் கர்த்தரிடம் திரும்ப, பாவத்திற்கு விலக அழைக்கிறது. தேவ கிருபை, தெய்வீக சமாதானம், நித்திய பேரின்ப வாழ்வு, புதிய வாழ்க்கை போன்ற ஆசீர்வாதங்களை இறைவன் இயேசு நமக்குத் தருகிறார். இயேசு அல்லாமல் வேறு ஒருவரும் நமக்குச் சந்தோஷம் தர முடியாது. இயேசுவே நமது சந்தோஷம்.

சந்தோஷம் பொங்குதே, சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
என்று பாடுங்கள்.

அன்புள்ள இறைவா, பாவம் நிறைந்த இந்த உலகத்தில் பரிசுத்த வாழ்வு வாழ அருள் புரியும். எமது பாவங்களை மன்னித்து புது வாழ்வு காட்டும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.