ஏசாயா 3 : 8-15 21 ஆகஸ்ட் 2025, வியாழன்
“சிறுமையானவனிடம் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.” – ஏசாயா 3 : 14
ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் தலைவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இதயத்தை துளைக்கும் செய்தியை கூறுகிறார், “ஏழைகளிடம் கொள்ளையிட்ட பொருள்கள் உங்கள் வீடுகளில் உள்ளது.” இந்த வசனம் தலைவர்கள் சிறுமைப்பட்டவர்களையும் ஏழைகளையும் பாதுகாத்து பராமரிக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. ‘ஏழைகளிடம் கொள்ளையிட்டது உங்கள் வீட்டில் உள்ளது’ என்ற சொற்றொடர் இன்றும் பொருத்தமானதாகவும் ஏழைகளுக்கு எதிராக தொடரும் அநீதியையும் சுட்டிக்காட்டுகிறது. ஏழைகளின் செல்வம் மற்றும் வளங்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் அநியாயமாக எடுத்துச் சென்று பதுக்கி வைக்கப்படும் அவலத்தைக் குறிக்கிறது. இஸ்ரவேலில் இருந்த தலைவர்கள் கடவுளின் மக்களை நீதியோடும் இரக்கத்தோடும் பரமாரிக்கும்படி பணிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏழை மக்களின் பொருட்களை அபகரித்துக்கொண்டனர்.
எல்லா பிரச்சனைகளிலும் கடவுள் நியாயந்தீர்க்கிறார் என்பதை ஏசாயாவின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கான செயல்களை செய்யாமலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் செயல்படுவதுமே கடவுள் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். சமூகத்தில் இத்தகைய மக்களோடு இயேசு நின்றார். அவர்களுக்காக குரல் கொடுத்தார்.
நம்மைச் சுற்றிப் பாதிக்கப்படும் ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாப்போம். அவரது நியாயமான உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம். தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்துவோம். தேவைப்படுபவர்களுக்கு உதவ நேரத்தையும் வளங்களையும் தாராளமாக வழங்குவோம். நம்மைப்போல ஏழ்மை நிலையிலிருக்கும் மக்களை மகிழ்வோடு வாழ வழி நடத்துவோம்.
நீதியின் கடவுளே, சிறுமைப்படுத்தப்பட்டவர்களின் துன்பங்களுக்கும் அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்கும் தைரியத்தையும், எங்கள் வளங்களை அவர்களுக்காக பயன்படுத்தும் ஞானத்தையும் எங்களுக்குத் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
