மத்தேயு 26 : 36-46 19 மார்ச், 2020-வியாழன்
“அப்பொழுது இயேசு அவர்களோடே கெத்செமனே என்னும் இடத்திற்கு வந்த சீஷரை நோக்கி: நான் அங்கே போய் ஜெபித்து வருமளவும்…..” – மத்தேயு 26 : 36
யூத மண்ணிலே கெதரோன் ஆற்றுக்கு மேல் ஒலிவமலைச் சாய்வில் இருந்தது ஒலிவ மரத்தோட்டம். இதன் நடுவில் ஒரு கிணறும் ஒலிவ என்ணெய் எடுக்க ஒரு ஆலையும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஏதேன் தோட்டத்தில் படைப்பின் வரலாற்றை அறிந்துகொள்ளும் நாம் கெத்சமெனே தோட்டத்தில் இயேசு நமக்கு தரும் இரட்சிப்பின் வரலாற்றை அறிய முடியும்.
இயேசு கிறிஸ்துவின் உருக்கமான ஜெபம், அவரது வியர்வை இரத்தமாக மண்ணில் விழுதல், தேவதூதன் இயேசுவைத் தேற்றும் நிகழ்வு போன்றவை நடைபெறுகின்றன. தொடர்ந்து இயேசு கைதாகும் நிகழ்வும் இத்தோட்டத்தில் நடைபெறுகிறது. இயேசு அனுபவித்த பாடுகளின் துவக்கமே மிக கொடுமையானது. எனது சித்தமா? கடவுளின் சித்தமா? என்ற கேள்வியே மிகப் பெரிய வேதனையாக அவருக்கு அமைந்திருந்தது. மன அழுத்தத்திலும் மரணத்திற்கேதுவான துக்கத்திலும் இயேசு குழப்பத்தில் இருந்தார். அவரது வியர்வைத்துளிகள் இரத்தத் துளிகளாய் விழுந்த துயரமும் அவரை வாட்டியது. மெய்யான மனிதனாக மரண வேதனை அவருக்கு இருந்தது. பாடுகள் ஆரம்பம் ஆனபோதே இயேசு கடவுளின் சித்தத்திற்கு தம்மை ஒப்படைத்தார். நாமும் சோதனைகள் நீங்க கடவுகளின் சித்தம் நம்மில் நிறைவே இடங்கொடுக்கும் படி அழைக்கப்படுகிறோம்.
இந்தத் தவக்காலத்தில் சோதனைகள் நீங்கிட கடவுளின் விருப்பத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். நமது சித்தம் துன்பம் வேண்டாம் என்று இருக்கலாம். ஆனால் துயரங்கள் எவ்வளவு பெரிய ஆசீர்வாதங்களையும் தேவதூதனின் தேறுதலையும் கொண்டுவருகிறது என்பதை உணருவோம். கெத்செமனே அனுபவங்கள் நமக்குக் கிடைக்கட்டும். நாமும் அவற்றைச் சகித்து, தாண்டிவர, வெற்றி காண கடவுள் அருள்வார்.
படைப்பின் கடவுளே! கெத்செமெனே தோட்டத்தில் உமது குமாரன் இயேசுவின் பாடுகளை துவக்கி கல்லறை தோட்டம்வரை காத்து நடத்தினதைப்போல் எங்களையும் கடைசிவரை காத்து நடத்தியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
