ரோமர் 13 : 11-14                                         12 ஜூலை, 2017 புதன்

“தெளிவடைந்து பாவஞ் செய்யாதிருங்கள்.” – 1 கொரிந்தியர் 15 : 34

தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்! ஏமாறாதீர்! தெளிவாயிருங்கள். நேர்மையுடன் வாழுங்கள்! பாவஞ்செய்யாதிருப்பீர். வேதத்தின் மற்றொரு மொழி பெயர்ப்பில் எழுதப்பட்டிருப்பதை எனது பார்வையில் எழுதிப் பார்த்தேன். தரப்பட்டுள்ள ஆதார வரிகளைவிட எனது பார்வையில் எழுதியிருப்பது சற்றுத் தெளிவாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பாவம், தவறு, தீமை, வேசித்தனம், சண்டை, பொறாமை போன்ற குற்றங்கள் மனக்குழப்பத்தில், தெளிவின்மையால் தான் நடைபெறுகின்றன. ஒருவகை மனமயக்கத்தில், ஏக்கத்தில், ஏமாற்றத்தில், விரக்தியில் தான் `இருளில் நடக்கிறவர்கள் போல’ துர் இச்சைகளுக்கு இடம் கொடுக்கிறோம். தெளிவாயிருக்கிற எவரும் தவறு செய்திடத் துணிவதில்லை. மனத்தெளிவு என்பது ஒரு வகை உள்வெளிச்சம். இறையவரின் அருட்தன்மையால் ஒவ்வொரு மனதிலும் மனவெளிச்சம் அருளப்பட்டுள்ளது. இறையவரின் அருட்பிரசன்ன உணர்வை மறக்கின்ற மனம்தான் இருட்டில் நடக்கத் துவங்குகின்றது.
மனத்தெளிவு, மனவெளிச்சம் உள்ள எவரும் இறையவர் தன்மையைத் தான் பிரதிபலிப்பர். மனத்தெளிவு, பகலில் நடப்பதைப் போன்ற தடுமாற்றமற்ற நேர் வழி நடப்பைத் தரும். ஒளியின் ஆட்சி இருளின் தடுமாற்றத்தை புறந்தள்ளிவிடும். நானே உலகத்தின் ஒளி என்று கூறிய இயேசுவோடு இணைந்திருப்போம். இதைத்தான் `ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்’ என்று பதிநான்காம் வசனத்தில் எழுதியிருக்கிறது. இயேசுவை அணிகலனாக ஆடையாக அணிந்து வாழ்ந்திட பவுலடியார் ரோம் நகர் விசுவாசிகளுக்குக் கூறியது நமக்கும் பொருந்தும். இயேசுவை அணிந்து கொள்வீர்! இயேசு உங்களிடம் சொல்லியது போல, நீங்கள் உலகத்திற்கு வெளிச்சம் ஆவீர்கள். வெளிச்சம் வெளிச்சத்தோடு தான் சேரும். இருள் எவ்வளவு இருந்தாலும், இருளால் வெளிச்சத்தை விழுங்க முடியாது. காரிருளிலும் ஒரு சிறிய அகல்விளக்கு தன்னை வெளிப்படுத்தும். வெளிச்ச வரிகள் வெளியே தெரியும். வெளிச்சம் விசுவாசிக்குக் கிடைத்திருக்கிற அருட்கொடை. தெளிவடைவீர்! பாவம் தவிர்ப்பீர்! நேர்மையுடன் வாழ்வீர்.

ஒளியின் உறைவிடமே, நீவீர் எனக்குத் தந்திருக்கிற ஒளியைத் தூண்டி என்னைப் பிரகாசிக்கச் செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.