யாத்திராகமம் 4 : 10-17                       09 ஜூலை 2025, புதன்

“கர்த்தருக்கு மோசேயின் மேல் கோபம் மூண்டது.” – யாத்திராகமம் 4 : 14

இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த காலம் அது. எகிப்திய அரசனும் மக்களும் இஸ்ரவேலரை கொடுமையாக நடத்தினார்கள். தங்கள் வாழ்வு கசந்துபோன நிலையில் கடவுளிடம் மன்றாடினார்கள். கடவுள் வரலாற்றுக்குள் வந்தார். மோசேயை பயிற்றுவித்துப் பக்குவப்படுத்தினார். தன் இனத்தான் ஒருவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்ட மோசே அதற்குக் காரணமான எகிப்தியனை கொலை செய்தான். இந்த செய்தியை அரசனும் மற்றவர்களும் அறிந்ததால் மோசே எகிப்தைவிட்டுத் தன் மாமன் வீட்டிற்கு ஓடினார்.

மோசே வனாந்தரத்தில் தன் மாமனின் ஆடுகளை மேய்ந்து வந்தார். ஒரு நாள் கடவுள் பற்றி எரிந்த முட்செடியிலிருந்து மோசேயை அழைத்தார். எகிப்தில் அடிமைகளாயிருக்கிற என் மக்களை அழைத்துக்கொண்டு நான் சுதந்தரமாக கொடுத்த நாட்டிற்கு செல் என்றார்.

இதைக்கேட்ட மோசே நான் திக்குவாயும் மந்தநாவும் உடையவன் என்றார். கடவுள் அவரிடம் மனிதருக்கு பேசும் திறனை கொடுப்பவரும் கேட்கும் திறனை கொடுக்கிறவரும் கடவுள் என்றார். உன் நாவிலிருந்து நான் பேசுவேன் என்று வாக்களித்தார். இதைக் கேட்ட மோசே கடவுளே! என்னை விடுத்து நீர் வேறு ஒருவரை அனுப்பும் என்றார். கடவுள் மோசேயை சந்தித்தது முதல் நான்காவது முறை மோசே எதிர்ப்பு தெரிவித்தார். இன்னும் மோசே கடவுளிடம் அழைப்பை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. கடவுளுக்கு மோசே மீது கோபம் வந்தது.

கடவுள் மோசேவிற்கு பார்வோன் அரண்மனையில் பயிற்சி கொடுத்தார். இதை மோசே இன்னும் அறிந்து கொள்ளவில்லை. கடவுள் மோசேயிடம் உன் சகோதரன் ஆரோன் நன்றாக பேசக்கூடியவன். நான் உன் நாவிலும் அவன் நாவிலும் இருந்து பேசுவேன். நீ இந்தக் கோலைப் பிடித்துக் கொண்டு போ என்றார்.

கடவுள் நமக்கு வரங்களையும், திறமைகளையும் அருளுகிறார். அவர் படைப்பாளர். அவரது எண்ணங்களை நம்மால் அறிந்து கொள்ள இயலாது. நம் ஒவ்வொருவரையும் தெரிந்தெடுத்து ஒவ்வொரு பணிக்காக பயிற்றுவிக்கிறார். வரங்களும் திறமைகளும் இல்லாத மக்கள் யாருமில்லை.

கடவுள் அருளிய வரங்களையும், திறமைகளையும் ஆராய்ந்து அறிவோம். எந்தப் பணிக்காக நம்மை கடவுள் பயிற்றுவிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுவோம். அவர் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து அவர் அழைப்பை ஏற்று வாழ்வோம்.

கடவுள் நமக்கு அருளும் பணிகளை உண்மையுடனும், கடவுள் பயத்துடனும் செய்வோம். அவர் வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் நிறைவேறாமல் போகாது. கடவுள் எந்தப் பணிக்காக அழைக்கிறாறோ அந்த பணியை மன நிறைவோடு செய்வோம்.

எங்களைப் பெயர் சொல்லி அழைக்கிற நல்ல கடவுளே! உம் அழைப்பை உணர்ந்து, ஏற்று உம் நாமம் மகிமைப்பட அவற்றை நிறைவேற்ற உதவி செய்யும், இயேசுவில் பிதாவே, ஆமேன்.