சங்கீதம் 25 : 5-8                          15 ஜுலை, 2021 வியாழன்

“நான் கிறிஸ்துவல்ல என்று அறிக்கையிட்டான்.” – யோவான் 1 : 20

ஒரு தேயிலைத் தோட்டத்தின் தொழிலாளர்களைச் சந்திக்க, குறிப்பிட்ட நாளில் வருவேன் என்று முதலாளி சொல்லியிருந்தார். அந்த நாளில் அழகிய கார் ஒன்று வந்து நின்றது. அதில் வந்தவர் நான் முதலாளி அல்ல, அவருடைய காரியதரிசி. அவருக்காக முன்னே வந்து எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க வந்திருக்கிறேன். எனக்குப் பின் முதலாளி வருகிறார் என்றார்.

தியானப் பகுதியில் யோவான் ஸ்நானகன் இது போலத்தான் கூறினார். யோவான் இயேசுவின் முன் தூதனாக கடவுளால் குறிக்கப்பட்டவர். மனம் திரும்ப வனாந்தரத்தில் ஜனங்களுக்கு அழைப்புக் கொடுத்தார். மனந்திரும்பி கனி கொடுக்காதவர்கள் வெட்டப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரித்தார். இவர் கடவுளின் பார்வையில் பெரியவர். திராட்ச ரசம் குடியாதவர். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர். எலியாவின் ஆவியும், வல்லமையும் பெற்றவர். கர்த்தருக்குத் தகுதியான ஜனத்தை ஆயத்தப்படுத்தியவர். யூதர்கள் யோவானிடம் ஆள் அனுப்பி நீர் யார்? எலியாவோ, தீர்க்கதரிசியோ, கிறிஸ்துவோ? எனக் கேட்டனர். யோவான் ‘நான் கிறிஸ்து அல்ல’ என்றவர், ‘நான் கிறிஸ்துவின் சத்தம். நான் அவருடைய காலணிகளை அவிழ்க்கவும் ஏற்றவன் அல்ல’ என்றார். இயேசுவைக் கண்ட போது, ‘உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என அறிக்கையிட்டார். இயேசுவை, உலகுக்கு இரட்சகராக – கிறிஸ்துவாக – மேசியாவாக அறிமுகப்படுத்தினார்.

அதாவது யூதர்கள் எதிர்பார்த்திருந்த மேசியா. இந்தச் சாதாரண மனிதர் தான் உலகத்தை இரட்சிக்கிறவர், பாவ மன்னிப்பை உலகுக்குக் கொடுக்கிறவர். மனுக்குலத்திற்கு நித்திய வாழ்வைக் கொடுக்கிறவர் இயேசுவே. யோவான் தன்னைத் தாழ்த்தினார், இயேசுவை உயர்த்தினார்.

மேடைகளில், சுவரொட்டிகளில் தங்கள் பெயரையும், புகைப்படங்களையும் முன் வைத்து பல தலைவர்கள் பெருமை பாராட்டுகின்றனர். இது உலகுக்குச் சரி எனப்படலாம்.

நாம் நம்முடைய தின வாழ்வில் கிறிஸ்துவை முன் நிறுத்துவோம். கிறிஸ்துவின் அன்பை மன்னிப்பை இரட்சிப்பை முன் நிறுத்துவோம். நம்மைத் தாழ்த்துவோம். இயேசுவின் புகழ் பெருகட்டும்.

உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிறவரே! உம்மாலே மீட்கப்பட்ட நாங்கள் எங்களைத் தாழ்த்தவும், உம்மை உயர்த்தவும் அருள் தாரும். ஆமேன்.