கலாத்தியர் 5 : 3-6                                          26 அக்டோபர், 2021 செவ்வாய்

“கிருபையினாலேயே விசுவாசத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டீர்கள்… இது கடவுளின் ஈவு” – எபேசியர் 2 : 8

தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் ‘இலவச பட்டா வழங்கல்’ என்றொரு நலத்திட்டம் உண்டு. சொந்த நிலம் இல்லாத ஏழைகளுக்கு, குடியிருப்பதற்கென, அரசுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஒரு சிறு பகுதியை ஏழைகள் பெயரிலேயே பட்டா பதிவு செய்து இலவசமாக வழங்கப்படுவது இத்திட்டம். இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவின்போது அந்நிலப் பகுதியின் மீதுள்ள உரிமைப் பத்திரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இப் பட்டா புத்தகம் கையில் கிடைத்தது முதல் அந்நிலப்பகுதிக்கு அவர் சொந்தக்காரராகி விடுகின்றார். ஒருவர் அந்நிலத்தின் உரிமையை இலவசமாகவே பெற்றுக் கொண்டார். அது அவரது சம்பாத்தியம் அல்ல. அவருக்குக் கிடைத்த அன்பளிப்பு, கொடை, ஈவு. சொந்தமாக உழைத்து, சம்பாதித்து உடைமையாக்கிக் கொள்ள முடியாத ஏழைகளுக்கு அரசு இலவசமாக இதைச் செய்துள்ளது. மனிதராகிய நாம் பெற்றிருக்கின்ற இரட்சிப்பு, இயேசு கிறிஸ்து வழியாக கடவுள் நடைமுறைப்படுத்திய திட்டத்தின் கீழ் நமக்குக் கிடைத்த நன்கொடை ஈவு, பரிசு, அன்பளிப்பு.

பவுல் அடியார் கலாத்திய திருச்சபையை நிறுவினார். சில யூதர் தவறான பிரச்சாரம் ஒன்றை அவர்களிடையே பரப்பினர். ஆபிரகாம் காலத்தில் கடவுள் ஏற்படுத்திய சடங்கையும் மோசே காலத்தில் தந்த நியாயப் பிரமாணச் சட்டங்களையும் அனுசரித்தால்தான் இரட்சிப்பு கிடைக்கும் என்பதுதான் யூதரின் பிரச்சாரம். எனவே, நியாயப் பிரமாணக் கிரியையினாலா? அல்லது இயேசுவில் விசுவாசம் கொள்வதனாலா? எதனால் எனக்கு இரட்சிப்பு கிடைக்கிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்குத்தான் பவுல் இரட்சிப்பு இலவசமாக, கிருபையாகக் கிடைத்தது என பதில் அளித்தார்.

தேவ கிருபையினாலே, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலேயே இரட்சிக்கப்படுகின்றோம். கிருபை நிறைந்த கடவுள் கிறிஸ்து வழியே இரட்சிப்பை இலவசமாக வழங்குகிறார். கடவுளை விசுவாசித்து அவர் கிருபையை ஏற்றுக் கொண்டு அதில் மட்டும் நிலைத்திருப்போம்.

ஆண்டவரே, இலவசமாய்த் தரப்படும் மகா பெரிய இரட்சிப்பினை பிள்ளைக்கொத்த விசுவாசத்தோடு ஏற்று வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.