1 பேதுரு 1 : 7-10                                   25 அக்டோபர், 2021 திங்கள்

“மீறுதல்களினால் நாம் மரித்தவர்களாயிருக்கையிலேயே நம்மை….. கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” – எபேசியர் 2 : 5

சின்னச் சின்ன ஆசைகளிலேயே மனிதனுக்கு மனிதன் வேறுபட்டிருக்கிறான். எல்லா மனிதருக்கும் முடிவான ஒரு ஆசை ஒன்றுண்டு. முக்தி, மீட்பு, சுவர்க்கம், மோட்சம், வீடு பேறு, கைவல்யம், இரட்சிப்பு என பல சொற்களால் மனித முடிவு நிலை அறியப்பட்டாலும், கிறிஸ்தவத் திருமறை அதிகமாகப் பயன்படுத்துவது ‘இரட்சிப்பு’ என்னும் சொல் ஆகும். நாம் யாவரும் இரட்சிக்கப்பட வேண்டியவர்கள். இரட்சிக்கப்பட்டிருக்கிறவர்கள்.

இரட்சிப்பு எனும் இறுதி ஆசையை அடைவதற்காக மனிதன் பல்வேறு வழிகளில் முயன்றதுண்டு. கர்ம மார்க்கம் எனும் நற்கிரியைகள் செய்தல், பக்தி மார்க்கம் எனும் கடவுளுக்குச் சேவை செய்தல், ஞான மிகுதியால் மௌனியாகி அல்லது துறவியாதல் போன்ற பல முயற்சிகள் மனித வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. இரட்சிப்பை, கடவுள் கிருபையாக யாவர்க்கும் இலவசமாக வழங்குகின்றார் எனத் திருமறை கூறுகின்றது.

இரட்சிப்பு சுத்த தயவால் உண்டான தேவ தத்தம்.
அது நாம் செய்த தர்மத்தால் வரும் என்பதவத்தம்!

என்று ஒரு பாடலில் ஒரு வரி உண்டு. நாம் இறந்தவர்களாயிருக்கை யிலேயே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என பவுல் அடியார் கூறுகின்றார். பாவத்தால் எல்லா மனிதரும் சாவு நிலைக்குத் தான் ஏற்றவர்கள். ஆகவே, இயேசு வழியே கடவுள் இலவச இரட்சிப்புத் திட்டத்தை நிறைவேற்றினார். அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் கடவுள் தம் கிருபை ஒன்றையே அணுகுமுறையாக வைத்து உலகத்தை இயேசு வழியே இரட்சிக்கச் சித்தம் கொண்டார். நம்மில் எவரும், நம்முடையதெனக் காட்டும் எதைக் குறித்தும் பெருமை பாராட்ட இடமில்லை. கடவுள் நம் எல்லோரையும் கிருபையாக இரட்சித்திருப்பது உலகமகா இரட்சண்யத் திட்டம். இந்த இரட்சிப்பை நம்மில் எவரும் இழந்துவிடக்கூடாது என்ற உறுதிடன் வாழுவோம்.

கடவுளே, நாங்கள் சாவுக்கு ஏற்றவர்களாக இருக்கிறோம். கிருபையினாலே எங்களை இரட்சிக்கிறீர். தோத்திரம். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே உரியன. இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.