எபிரேயர் 10 : 1-4 20 பிப்ரவரி 2021, சனி
“…இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பில்லை.” – எபிரேயர் 9 : 22
பாவம் என்கிற சித்தாந்தத்தை எல்லா சமயங்களிலும் காண்கிறோம். பாவம் மனிதனை கடவுளை விட்டுப் பிரிக்கிறது. கடவுளோடு உள்ள உறவைப் புதுப்பிக்க மனிதன் பல வழிகளை ஆராய்ந்தான். இதற்காக புண்ணிய இடங்களுக்குச் சென்றான். புண்ணிய நதிகள் என்று எண்ணி அவற்றில் நீராடினான். கடல்களைத் தேடி ஓடினான். மிருகங்களைப் பலியிட்டு இரத்தஞ்சிந்திப் பார்க்கிறான். இவற்றில் ஒன்றிலும் நிரந்தர தீர்வு கிடைத்தபாடில்லை. நாம் வாசித்த பகுதியும் இதை தெளிவுபடுத்துகிறது.
நமது தியானப் பகுதி இரத்தஞ் சிந்தாதபடி பாவ மன்னிப்பில்லை என்று உறுதிபடக் கூறுகிறது. பாவம் மனிதனால் வந்தது. அதனால் பாவ விமோசனமும் மனிதனால் தான் வரவேண்டும். கடவுள் மேசியாவான இயேசுவை பிறக்கச் செய்யும் முன் உலகை ஆயத்தப்படுத்தினார். எல்லாம் நிறைவேறின பின் நாசரேத் ஊரில் வாழ்ந்த மரியாள் என்ற கன்னிகையிடம் கபிரியேல் தூதனை கடவுள் அனுப்பி இயேசுவின் பிறப்பின் செய்தியை அறிவித்தார். மரியாள் தன் நியாயமான ஐயப்பாட்டை கூறினார். மரியாளின் ஐயத்தை நீக்க, தூதன், பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார். அவர் உன்னை பரிசுத்தமாக்குவார். அதைத் தொடர்ந்து உன்னதமானவரின் வல்லமை உன் மேல் நிழலிடும். அதனால் நீ கருவுறுவாய். இவை நிகழ்வதால் நீ பெற்றெடுக்கும் குழந்தையான மேசியா பரிசுத்தமுள்ளவராயிருப்பார். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாய் என்றார். மரியாளின் பாவம் அகற்றப்பட்டபின் இயேசு கருவுற்று பிறந்தார். இதனால் இயேசுவுக்கு ஜென்ம பாவம் அல்லது தாய் தந்தையர் வழியாய் பிறப்பில் வருகிற பாவம் இல்லாதவராகப் பிறந்தார். இதனால் தான் இயேசு `உங்களில் யார் என்னில் பாவம் உண்டென்று குற்றப்படுத்துவான்’ என்று துணிவோடு கேட்டார்.
நாம் கடவுளின் கிருபையைப் பெற இயேசு அதற்கு ஆதாரமான பலியாகப் பலியிடப்பட்டார். கிருபை + ஆதாரம் + பலி = கிருபாதாரபலி ஆனார். தூய பேதுரு எழுதின முதலாம் நிருபத்தில் `மாசில்லாத கறையற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டீர்கள் என்று எழுதுகிறார். இயேசு பாவமில்லாதவராக குற்றமில்லாத பரிசுத்த இரத்தத்தை சிந்தி மனுக்குலத்தை மீட்டதால் இனி பலிகளுக்குத் தேவை இல்லை. சிலுவையில் பலியான இயேசுவை விசுவாசிப்பதே நம் மீட்புக்கு அடித்தளம். `இயேசுவின் இரத்தம் எவ்வித பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரிக்கிறது’. இந்த விசுவாசத்துடன் சிலுவையிடம் வருவோம். பாவமன்னிப்புப் பெறுவோம். மகிழ்ச்சியாய் வாழ்வோம்.
பாவிகளை நேசிக்கிறவரே! இயேசுவே எங்களை மீட்கும் கிருபாதார பலி என்ற விசுவாசத்தில் வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.